2018ல் புதிய இந்தியா பிறக்குமோ? 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படலாம்... உஷார்
கடந்த ஆண்டைப்போலவே மீண்டும் ஒரு உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி மறைமுகமாக உணர்த்தி உள்ளது.
டெல்லி: தற்போது புழக்கத்தில் உள்ள உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு எந்த நேரத்திலும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் 1000 போன்ற உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவிப்பு செய்தார்.
அதற்கு மாற்றாக முற்றிலும் புதிய வடிவத்தில் 500 மற்றும் 2000 நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்படும் என்றும் அறிவித்தார். கூடவே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளவும் போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டது.
வங்கி வாசலில் மக்கள்
புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 நோட்டுக்களை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்கு ஏற்ற வகையில் ஏடிஎம்களை மாற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதால் 2 நாட்களுக்கு நாட்டில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின்பு வங்கிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. பாமரன் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலும் நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றனர்.
பணப்புழக்கம்
அப்போது குறைந்த மதிப்பிலான 10 முதல் 100 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அப்படியே குறைந்த மதிப்புடைய நோட்டுக்கள் கிடைத்தாலும் அவை மிகவும் கிழிந்த நிலையில் உள்ள நோட்டுக்களே மக்களுக்கு கிடைத்தன. மக்களின் சிரமங்களை புரிந்துகொண்ட மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் விரைவில் புதிய வடிவில் 50 மற்றும் 200 போன்ற நோட்டுக்கள் அச்சிட்டு புழக்கத்திற்கு விடப்படும் என்றும் தெரிவித்தன.
கையில் சிக்காத பணம்
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சொன்னது போலவே, கடந்த ஆகஸ்டு மாதத்தில் அசத்தலான வடிவத்தில் 200 ரூபாயை அச்சடித்து புழக்கத்திற்கு விட்டன. உலக நாணயவியல் வரலாற்றில் முற்றிலும் புதியதாக முதன்முதலில் 200 என்ற மதிப்பில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டது இந்தியாவில்தான்.
200 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டாலும் அவை பெரும்பாலும் வங்கிக் கிழைகளில் மட்டுமே கிடைத்து வந்தன. அதுவும் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளுக்கு இரண்டு நோட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
விளக்கம் தராத வங்கிகள்
கடந்த நவம்பர் மாதத்தில் தான் ஏடிஎம் இயந்திரங்களிலும் 200 ரூபாய் நோட்டுக்கள் எடுப்பதற்கு ஏற்ற வகையில் ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தற்போது ஏடிஎம் இயந்திரங்களிலும் 200 நோட்டுக்கள் கிடைப்பதில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் முற்றிலும் புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு (எப்போ?) விடப்பட்டன. ஆனால் அவை வந்த சுவடும் தெரியவில்லை. போன சுவடும் தெரியவில்லை. வங்கிக் கிளைகளில் விசாரித்தால் அவர்களால் உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை.
புழக்கத்திற்கு வராத பணம்
கடந்த டிசம்பர் 8ம் தேதி வரையிலும் சுமார் 16,957,000,000 எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுக்களும், சுமார் 3,654,000,000 எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுக்களும் அச்சிடப்பட்டன. அவற்றின் மதிப்பானது சுமார் 15,787,000,000,000 ரூபாய்களாகும். இவற்றில் சுமார் 2,463,000,000,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுக்கள் இன்னும் புழக்கத்திற்கு விடப்படவில்லை.
ரிசர்வ் வங்கியின் முடிவு
இதுபற்றி கருத்து கூறிய பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமிய காந்த் கோஷ், புழக்கத்திற்கு விடப்படாத நோட்டுக்கள் ஒருவேளை 2000 ரூபாய் நோட்டுக்களாகவோ அல்லது குறைந்த மதிப்புடைய புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களாகவோ இருக்கலாம் என்று சூசகமாக தெரிவித்தார்.
உயர் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றுவதற்கு மிகவும் சிரமப்படுவதால்தான், அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கியானது இன்னும் புழக்கத்திற்கு விடவில்லை.
பணமதிப்பு நீக்கம்
பொதுமக்கள் எளிதில் மாற்றம் வகையில் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்திற்கு விடும் முடிவிற்கு வந்துள்ளது போல் தெரிகிறது. இதன்மூலம் தற்போது புழக்கத்தில் உள்ள உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு எந்த நேரத்திலும் அறிவிக்கலாம்.
சில்லறையா மாத்துங்க
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்வது நல்லது. இல்லை என்றால்? கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றவதற்கு தெருத்தெருவாய் அலைந்ததை சற்று நினைத்துப்பாருங்கள்.