பெருகும் கள்ளநோட்டு... 500, 2000 ரூபாய்தாள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்!
கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்க, ஒவ்வொரு 3 - 4 ஆண்டுகளுக்கு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை மாற்ற மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
டெல்லி: கள்ள நோட்டுக்களை அதிகரிப்பதை தடுக்க உயர்பணமதிப்புடைய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதுகாப்பு அம்சங்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து முற்றிலும் புதிய வடிவில் புதிய தொழில் நுட்பத்தில் உள் நாட்டிலேயே அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன.
500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டாலும், பொதுமக்களுக்கு அன்றாட சில்லறைச் செலவுகளுக்குத் தேவையான குறைந்த மதிப்புடைய நோட்டுக்களான 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் தட்டுப்பாடும் சிரமமும் ஏற்பட்டது அப்படியே 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தாலும் அவை பெரும்பாலும் மிகமிகப் பழைய நோட்டுக்களாகவே இருக்கின்றன. புதிய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் சொற்ப அளவிலேயே கிடைக்கின்றன.
200 ரூபாய் நோட்டுக்கள்
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மத்திய ரிசர்வ் வங்கி புதியதாக 200 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிட முடிவெடுத்தது. இதை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி குழுக் கூட்டத்தில் முடிவெடுத்தாக தெரிகிறது. எனினும், இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் ரிசர்வ் வங்கியிடமிருந்து வெளியாவில்லை
கள்ள ரூபாய் நோட்டுக்கள்
உயர்மதிப்புடைய புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த நான்கு மாதங்களில் அதிகளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சமீபத்தில் மேற்கு வங்கம், வங்கதேசம் எல்லையில் கைப்பற்றப்பட்ட ரூ.2000 போலி நோட்டுகளில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள், புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டில் இருக்கும் 17 பாதுகாப்பு அம்சங்களில் 11 இடம்பெற்றிருந்தன.
உயரதிகாரிகள் ஆலோசனை
கள்ள நோட்டுக்களை எப்படி தடுப்பது என்று உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கள்ள ரூபாய் நோட்டுகளைத் தடுக்க கடந்த மார்ச் 30ஆம் தேதியன்று டெல்லியில் மத்திய வர்த்தக மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெரிஷி ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள்
இந்தியாவின் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் நீண்டகாலமாகவே மாற்றப்படவில்லை. ரூ.1000 நோட்டுகள் இந்தியாவில், கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசின் பண மதிப்பழிப்பு அறிவிப்புக்கு முன்பு வரை ரூ.1000 நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பாதுகாப்பு அம்சங்கள்
பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்களது கரன்சியின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒவ்வொரு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதுகாப்பு அம்சங்களை மாற்றிக்கொள்ளும். அதே முறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகளும் ஏறக்குறைய பழைய ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கின்றன. எனவே, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை மாற்றுவதன் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அதிகளவில் கட்டுப்படுத்த முடியும்.என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.