தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை கிடையாது... வணிகர்கள் உறுதி
அந்நிய நாட்டு குளிர்பானங்களை அறவே ஒதுக்கிவிட்டோம். இனி தமிழகத்தில் கோக், பெப்சி நிறுவனங்களின் குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று மார்ச் 1 முதல் உறுதியாக அறிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெப்சி, கோக் விற்பனை செய்யமாட்டோம் என்று சொன்னது போலவே மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளனர். இன்னும் 10 நாட்களுக்குள் அனைத்து சரக்குகளையும் வெளியேற்றி விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பீட்டாவை தடை செய் என்று குரல் எழுப்பிய இளைஞர்கள், தமிழகத்தின் நீர் வளத்தை உறிஞ்சி நடத்தப்படும் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.
இக்கோரிக்கையை ஆதரித்த வணிகர் சங்கங்கள் மார்ச் 1ம் தேதி முதல் அந்நியநாட்டு குளிர்பானங்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படாது என்று அறிவித்திருந்தனர். அதன்படி இன்று பல இடங்களில் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை கொட்டி ஆர்பாட்டம் நடத்தினர்.
பெப்சி, கோக் விற்பனை கிடையாது
வணிகர்கள் சங்கங்கள் அறிவித்தது போல பல கடைகளில் பெப்சி, கோக் நிறுவனங்களின் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படவில்லை. அந்நிய குளிர்பானங்கள் உள்ள கடைகளில் உள்ள சரக்குகளை படிப்படியாக வெளியேற்றி விட்டு 10 நாட்களில் முற்றிலுமாக ஒழித்து விடுவோம் என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்ரமராஜா கூறியுள்ளார்.
புறக்கணிக்கும் மக்கள்
தமிழக வணிகர்களும் மக்களும் கடந்த இரு மாதங்களாகவே அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி குடிப்பதில்லை. அனைவரும் உள்நாட்டு குளிர்பானங்கள், இயற்கை பானங்களுக்கு மாறி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பு பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை ஒரு கடையில் 75 பாட்டில் விற்பனையானது.
விற்பனை சரிவு
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு கடந்த சில வாரங்களாக 10 பாட்டில்தான் விற்பனையாகிறது. இந்த குளிர்பானங்களின் விற்பனை 75 சதவிகிதம் சரிந்துள்ளதாக வணிகர்கள் கூறியுள்ளனர். சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு ரூ.15 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெற்றது. தற்போது, மாதத்திற்கே ரூ.20 லட்சம் மட்டுமே விற்பனையாகிறது என்று மளிகைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
தமிழக மக்களின் வெற்றி
பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை இன்று முதல் தமிழகத்தில் வணிகர்கள் விற்க மாட்டார்கள் என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு நடத்தியது முதல் வெற்றி, தமிழகம் முழுவதும் அந்நிய குளிர்பானங்கள் விற்பனை தடுத்து இரண்டாவது வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியை அப்படியே விட்டு விடாமல் அதை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மாபெரும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியும் புறக்கணிப்பு
தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்பானங்களின் முகவர்கள், விற்பனையாளர்கள் கொண்டு வரும் சரக்குகளை தமிழக வணிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். பதநீர், இளநீர் விற்பனை செய்யவும் வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.