பஞ்சாப்: 25 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆம் ஆத்மியில் சேர விரும்பினர்... மறுத்துவிட்டோம்: கெஜ்ரிவால்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் 25 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர விரும்பியதாகவும் ஆனால் அவர்களை கட்சியில் சேர்க்கவில்லை என்றும் அதன் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆம் ஆத்மிக்கு அதிக இடங்கள்
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். மேலும் பஞ்சாப்பில் தொங்கு சட்டசபைதான் உருவாகும்; ஆம் ஆத்மி கட்சி அதிகமான இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனவும் அந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் வேட்பாளர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்?
இதனைத் தொடர்ந்து இன்று மொகாலியில் வீடு வீடாக தேர்தல் பிரசாரம் செய்தார் கெஜ்ரிவால். அப்போது செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார். மேலும் விவசாயிகளின் கட்சியான சன்யுக் சமாஜ் மோர்ச்சா (Sanyukt Samaj Morcha) உடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். ஆனால் தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சன்யுக் மோர்ச்சாவுடன் கூட்டணி அமைக்கவில்லை.

60 சீட் கேட்ட விவசாயிகள் கட்சி
எங்களிடம் 60 தொகுதிகளை சன்யுக் சமாஜ் மோர்ச்சா எதிர்பார்த்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இதுவரை 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம். அதனால் சன்யுக் மோர்ச்சாவுக்கு அதிக அளவு தொகுதிகளை கொடுக்க முடியவில்லை. 10 முதல் 15 தொகுதிகளை ஒதுக்குவதாக நாங்கள் கூறினோம். ஆனால் சன்யுக் சமாஜ் மோர்ச்சா இதனை ஏற்கவில்லை. இரு கட்சிகளும் பஞ்சாப்பின் நலனுக்காகத்தான் குரல் கொடுக்கிறோம். பாடுபடுகிறோம்.

பணம் பெற்றுக் கொண்டு சீட்டா?
ஆம் ஆத்மி கட்சியில் பணம் பெற்றுக் கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பான புகார்கள் என்னிடமும் வந்தன. ஆனால் வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அப்படி வலுவான ஆதாரங்கள் இருந்தால் அத்தகைய நபர்களை போலீசிடம் ஒப்படைக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம்.

25 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது. பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் 25 எம்.எல்.ஏக்கள், ஆம் ஆத்மியில் சேருவதற்காக என்னை தொடர்பு கொண்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினரை சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதால் அவர்களை சேர்க்க மறுத்துவிட்டோம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.












Click it and Unblock the Notifications