1,31,457 பேர் குரூப் 1 தேர்வெழுத வரவில்லை! 3,22,414 பேர் விண்ணப்பித்தும் பாதிக்கு பாதி ஆப்சென்ட்!
சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வுக்கு 3,22,414 பேர் விண்ணபித்திருந்த நிலையில் 1,31,457 பேர் தேர்வெழுத வரவில்லை.
அனைத்து மையங்களிலும் சேர்த்தே 1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது வருகை சதவீதம் 59.23 மட்டுமே என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு.. 3.5 லட்சம் பேர் பங்கேற்பு..என்னென்ன கட்டுப்பாடுகள்
குரூப் 1 தேர்வு
சப் கலெக்டர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்க பதிவாளர், உதவி ஆணையர், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் இன்று காலை குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் விண்ணபித்திருந்தனர். அதன் படி 3,22,414 பேர் குரூப் 1 தேர்வுக்கு விண்ணபித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
92 பணியிடங்களுக்கு
92 பணியிடங்களுக்கு மூன்றே கால் லட்சம் பேர் போட்டி போட முன்வந்ததால் குரூப் 1 தேர்வு மிகுந்த கவனம் பெற்றதுடன் முக்கியத்துவமும் பெற்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், பறக்கும் படையின் சோதனைகளும் நடைபெற்றன. குரூப் 1 தேர்வுக்கு 3,22,414 பேர் விண்ணபித்திருந்த நிலையில் 1,31,457 பேர் தேர்வெழுத வரவில்லை என்பது தான் இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் ஆகும்.
பாதிக்கு பாதி
குரூப் 1 தேர்வுக்கு ஆர்வமாக விண்ணப்பித்துவிட்டு பாதிக்கு பாதி பேர் தேர்வெழுத வரவில்லை என்பது கவனம் ஈர்த்திருக்கிறது. இதனிடையே 59,23% பேர் மட்டுமே, அதாவது 1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பேர் தேர்வு எழுத வராததற்கு காரணம், தேர்வில் வெற்றி பெறுவோமா மாட்டோமா என்ற ஊசலாட்டமான எண்ணமாக தான் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
எப்போது முடிவு?
குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற கேள்வித்தாளானது சிலருக்கு எளிமையானதாகவும் சிலருக்கு கஷ்டமானதாகவும் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.