நேர கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள்.. 280 விபத்துகள்.. ஆனால் ஒரு ஆறுதல்!
சென்னை : சென்னையில் நேரக் கட்டுப்பாடு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு வெடித்தபோது தீ விபத்துகள் நடந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் 280 இடங்களில் பட்டாசு தொடர்பான விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
எனினும், தீபாவளி பட்டாசு தொடர்பான தீ விபத்துகளில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டேஞ்சர்”.. குழந்தையுடன் எச் ராஜா செயல்! இப்படி பட்டாசு வெடிக்காதீங்க! திமுக ராஜீவ் காந்தி வார்னிங்
தீபாவளி கொண்டாட்டம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மழை பாதிப்பும் இல்லாமல் இருந்ததால் அனைத்து தீபாவளி வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று பட்டாசுகள் அதிகமாக வெடிக்கப்பட்டன.
பட்டாசு தீ விபத்துகள்
நேற்று சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ராக்கெட் வெடிகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் நிகழ்ந்த தீ விபத்துகளில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றனர்.
2 மணி நேரம் மட்டுமே அனுமதி
உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அதாவது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசுகள் வெடித்தாலோ, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடித்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
163 வழக்குகள்
இந்நிலையில் சென்னையில் நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.