பொங்கல் பண்டிகை: 2 நாளில் இத்தனை பேர் சொந்த ஊர் சென்றார்களா! அமைச்சர் சிவங்கர் வெளியிட்ட தகவல்
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க தொடங்கியுள்ளனர். மக்களின் வசதிக்காக நேற்றில் இருந்தே தமிழக போக்குவரத்துதுறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை கோயம்பேட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இரவு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பணி மற்றும் தொழில்நிமித்தம் என பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் வசிக்கும் சென்னையில் இருந்து சாரை சாரையாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
இதனால், நேற்று முன்தினம் பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு நிலைமை அதை விட மோசமாக இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தென்பட்டன.

பொங்கல் பண்டிகை
பேருந்துகளை துரத்தி துரத்தி பயணிகள் இடம்பிடித்ததையும் பார்க்க முடிந்தது. ரயில்களிலும் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது. பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இரவு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னையில் இருந்து...
12-ந்தேதி சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 586 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு 1,220 பேருந்துகள் இயக்கப்பட்டு 61,225 பயணிகள் பயணம் செய்துள்ளனர். நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளில் ஆயிரத்து 544 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இன்று 2100 பேருந்துகள்
1,855 சிறப்புப் பேருந்துகளில் 904 பேருந்துகள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து192 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மொத்தம் 2 நாட்களில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 5,134 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதில் 2,66,492 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்றும் அதாவது சனிக்கிழமை சென்னையில் இருந்து 2,100 தினசரி பேருந்துகளுடன் 1,943 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

15,599 பேருந்துகள்
இந்த ஆண்டு 1,949 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகளில் 1, 87,103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு வாயிலாக 10 கோடியே 3 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,334 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,965 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,599 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.

சென்னை ஆப் செயலி மூலம்
காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந்தேதி அன்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இரவு நேர பேருந்துகளாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் முடிந்து மக்கள் திரும்பி வருகிற போது 18 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை ஆப் செயலி மூலம் தாங்கள் முன்பதிவு செய்துள்ள எஸ்.இ.டிசி பேருந்துகள் எங்கு செல்கிறது என்பதை பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications