நமக்கானதல்ல.. நம்மை சுற்றி இருப்பவர்களுக்கானது - கொரோனா தடுப்பூசி குறித்து எஸ்.வி.சேகர்
சென்னை: கொரோனா தடுப்பூசியின் கட்டாயம் குறித்து வாசகர்கள் அறிந்து கொள்வதற்கான செய்தி இது.
Recommended Video
கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 1 முதல் தொடங்கியது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி, தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலிக்க முடியும். தடுப்பூசி மையத்தின் பயனாளிகள் கட்டணமாக ரூ. 150, தடுப்பூசி சேமிப்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நபருக்கு ரூ.100 வரை வசூலிக்க முடியும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியானது இலவசமாக கிடைக்கும்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-WIN Appஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங்களாகவே 'கோ-வின் 2.0' இணையதளத்திலும், 'ஆரோக்கிய சேது' செயலியிலும் முன்பதிவு செய்யலாம்.
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் தனது குடும்பத்துடன் கொரோனா செலுத்திக் கொண்டார். அப்போது அவர் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனையில் இருந்தே நமது ஒன் இந்தியா தளத்திடம் அவர் பேசுகையில், "நான் இப்போ தான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஊசி போடப் போறீங்களான்னு கேட்டுட்டு இந்தப் பக்கம் திரும்புறதுக்குள்ள 'போட்டாச்சு சார்'-ன்னுட்டாங்க. இதுல பயப்பட வேண்டிய அவசியமே இல்ல. இதுல பக்க விளைவு வரும், பிரச்சனைகள் வரும்-னு வதந்தியை பரப்பக் கூடியவர்கள் தான் சொல்வார்கள். இந்த தடுப்பூசி நம் நலனுக்கானது மட்டுமல்ல. நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தை சேர்ந்தவர்களின் நலனுக்கானது. அது தான் ரொம்ப முக்கியம். மறக்காம அனைவரும் கோவிட் தடுப்பூசி போடுங்க" என்று தெரிவித்துள்ளார்.