எப்ப பாத்தாலும் என்னயவே.. நான் தான் கிடைச்சேனா? பெரிய பழுவேட்டரையருக்கு வந்த கோபம்! என்னாச்சு?
சென்னை : எல்லா நடிகர்களும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள், ஆனால் என்னை மட்டும் ஏன் டார்கெட் செய்வது ஏன் என தெரியவில்லை என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மீண்டும் ஆவேசமாக பதில் அளித்திருக்கிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைப்பட்டு தற்போது அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தற்போது வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லாத நிலையில் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு தடை செய்யவேண்டும்! சொல்வது ரம்மி
ஆன்லைன் ரம்மி
கடந்த சில நாட்களுக்கு முன்தினம் கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்சம் பணத்தை இழந்ததற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான் முதல் தமிழகத்தில் தமன்னா, மனோபாலா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைனில் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.
நடிகர் சரத்குமார்
சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி எனும் கட்சியின் தலைவராக இருப்பதோடு சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார். ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்திலேயே நடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சமுக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதனை வைத்தும் சிலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
தடை செய்யுங்கள்
இந்நிலையில் இதுதொடர்பாக மீண்டும் பேசியுள்ள அவர், எல்லா நடிகர்களும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள், ஆனால் என்னை மட்டும் ஏன் டார்கெட் செய்வது ஏன் என தெரியவில்லை. ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள், பிறகு நான் ஏன் நடிக்கப்போகிறேன். தமிழகத்தில் மதுவால் உடல்நலத்திற்கு கேடு என நீங்களே கூறிக்கொண்டு, நீங்களே மது விற்பனையும் நடத்துகிறீர்கள், மக்களுக்கு தீமை விளைவிப்பதை தடை செய்யுங்கள்" என கூறியுள்ளார்.
நெட்டிசன்கள் கண்டனம்
அதே நேரத்தில் மற்றவர்கள் எல்லாம் நடிகர்கள் மட்டும் தான் ஆனால் சரத்குமார் நடிகர் என்பதை தாண்டி ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அதனால் அவர் மீது கூடுதல் கவனம் விழுகிறது எனவும், அது மட்டுமல்லாமல் யூட்யூப், பேஸ்புக், என எங்கு பார்த்தாலும் அவர் நடிக்கும் விளம்பரங்கள் தானே வருகிறது. அதனால் அப்படித்தான் கேட்போம் என நெட்டிசன்கள் கமெட்ண்ட் செய்து வருகின்றனர்.