"தப்பு தான்.. தவிர்த்து இருக்க வேண்டும்!" மன்னார்குடி ஜீயர் பேச்சு குறித்து.. ஆதீனங்கள் பரபர கருத்து
சென்னை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆதீனங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் அந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்
தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேசம் நடைபெறும். தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் கோவிலுக்கு தூக்கி செல்வதுதான் இந்த பிரவேசத்தின் முறையாகும்.
“எல்லோருக்கும் ஒரே அசைன்மென்ட்” - ஆதீன சர்ச்சையில் இணைந்த ஆளுநர் - பேச்சின் பின்னணி என்ன?
தடை
இந்த பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து. தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருள் ஆனது. இதற்கு பல்வேறு தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மக்களின் ஆன்மீக நம்பிக்கையில் அரசு தலையிடக் கூடாது என்று ஒரு தரப்பினரும், மனிதரை மனிதர் தூக்கிச் செல்வதைத் தடை விதித்தது சரி தான் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
அரசியல்
இந்தச் சம்பவம் அரசியல் அரங்கிலும் எதிரொலித்துள்ளது. பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நிச்சயம் நடத்திக் காட்டுவோம் என்ற ரீதியில் பேசி வருகின்றனர். சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூட, தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறி இருந்தார்,
முதல்வர் உடன் சந்திப்பு
இதனிடையே இன்று தலைநகர் சென்னையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், கோவை பேரூராதீனம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்த ஆதீனங்கள், திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினோம் என்றனர்.
சுமுக தீர்வு
பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் அரசியலைக் கலக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்ட ஆதீனங்கள், பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், சுமுகமான தீர்வு எட்டப்படும் என நம்புகிறோம் என்றும் பட்டணப் பிரவேசத்தைச் சுமுகமாக நடத்த அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், அமைச்சர்கள் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் பேசியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆதீனங்கள் கூறினர்.
Recommended Video
அமைச்சர்கள் நடமாட முடியாது
தருமபுரம் ஆதின பட்டின பிரவேசம் குறித்து சமீபத்தில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகாமன்னார் பேசுகையில், "பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. இதை யாராலும் தடுக்க முடியாது. எந்த அமைப்பிற்கும் அந்த அருகத்தையும் கிடையாது. அரசுக்கும் அந்த அருகதை கிடையாது. முடிந்தால் இந்த பட்டினப் பிரவேசத்தைத் தடுத்துப் பாருங்கள். இந்து மதத்திற்கு விரோதமாகச் செயல்படும் எந்த அமைச்சரும்.. எம்எல்ஏவும் சாலையில் நடமாட முடியாது" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.