ஸ்டாலின் அழகிரியை சொல்லியிருப்பார்.. ஏழேழு ஜென்மம் எடுத்து வந்தாலும்.. போட்டுத் தாக்கிய ஜெயக்குமார்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை விமர்சிக்கவில்லை, அவரது அண்ணன் மு.க.அழகிரியை மனதில் வைத்துத்தான் கூறி இருப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
முதலமைச்சர் ஸ்டாலின் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவை அழிக்க ஒருவர் பிறக்கவே மாட்டார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவில் எந்தக் காலகட்டத்திலும் மூன்றாவது நபர் தலையிடுவதை தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு திருமா நன்றி.. நெகிழ்ச்சி பதிவு..!
அவைத்தலைவர்
கட்ந்த 23ஆம் தேதி பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தினர்.
தமிழ்மகன் உசேன்
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அண்ணா தலைமையிலான ஒன்றுபட்ட திமுகவில் 1953-ல் வட்டச் செயலராக தன்னை இணைத்துக் கொண்டவர் தமிழ்மகன் உசேன். 1954-ல் முதன்முதலாக எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கியவர். கட்சியில் படிப்படியாக வளர்ந்த தமிழ்மகன் உசேன், திமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியால் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியபோது, எம்ஜிஆருடன் இருந்துள்ளார். எம்ஜிஆர் கட்சி தொடங்கும்போது, கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலராக இருந்தார். இப்போது கட்சியின் உச்சபட்ச பதவியான அவைத் தலைவர் பதவிக்கு வந்துள்ளார்.
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமைக்கு வர வேண்டும் என்ற தொண்டர்களின் குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது. அதிமுக தொண்டர்கள் யாருக்கும், ஓபிஎஸ்ஸை அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது. விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றிருந்தால், அதை யார் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது.
பொதுக்குழு
கட்சியில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது பொதுக்குழு தான். ஒற்றைத் தலைமைதான் அதிமுகவுக்கு வேண்டும் என்பது பொதுக்குழு எடுத்த முடிவு. ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை செயல்வடிவம் பெறும். கட்சியில் பெரும்பாலானோர் பழனிசாமி தலைமையில்தான் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என்று விரும்பும்போது, அதற்கு ஆதரவு கொடுக்காமல், நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகுவதால், கட்சியினருக்குத்தான் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக தலையீடு
மேலும், அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சையில் பாஜக தலையிடுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவில் எந்தக் காலகட்டத்திலும் எந்தவொரு மூன்றாவது நபர் தலையிடுவதையும் அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
மு.க.அழகிரியை மனதில் வைத்து
தொடர்ந்து, திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தது குறித்துப் பேசிய ஜெயக்குமார், திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை கூறவில்லை. அவரது அண்ணன் மு.க.அழகிரியை மனதில் வைத்துத்தான் கூறி இருப்பார், முதலமைச்சர் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவை அழிக்க ஒருவர் பிறக்கவே மாட்டார் எனத் தெரிவித்தார்.