லோக்சபா கூட்டணி பற்றியெல்லாம் பேசல… அதிமுக மா.செ. கூட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
சென்னை:லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டமானது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்ட சபையில் தாக்கல் செய்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் லோக் சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப் பட்டதாக கருதப்படுகிறது. இந் நிலையில் கூட்டம் முடிந்த பின்னர்... அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா குறித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப் பட்டது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அதிமுக அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும். அந்த கூட்டணி மெகா கூட்டணியாக தான் இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பேச்சு தொடங்கும் என்று கூறினார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் வழியாக, விரைவில் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தமிழகத்தில் முதல் கட்சியாக அதிமுக தொடங்கி இருக்கிறது. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.