அதிமுக முதல்வர் வேட்பாளரானார் எடப்பாடி பழனிசாமி... சாதனைகளை முன்வைத்து போராடி சாதித்தார்!
சென்னை: 3 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து மிகப் பெரும் போராட்டத்தை நடத்தி அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அடுத்த கூவத்தூரில் சசிகலாவால் முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் எடப்பாடி கே பழனிசாமி. அதற்கு முன்னர் ஜெயலலிதா காலத்தில்கூட அமைச்சர்களோ அமைச்சராக இருந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் பதவியில் அமர்ந்தது முதல் சோதனைகளை எதிர்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ், தர்மயுத்தம் என்ற பெயரில் 11 எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு தனிக்கட்சி நடத்தினார். எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது ஓபிஎஸ் அணி எதிர்த்தே வாக்களித்தது.
வலுவிழந்த ஓபிஎஸ்.. கொடி நாட்டிய எடப்பாடியார்.. கொங்கு மண்டலமா? தென்பாண்டி சீமையா.. இன்னும் இருக்கு!
கவிழ்ப்பு முயற்சிகள் முறியடிப்பு
ஆனாலும் ஆட்சி கவிழாமல் பார்த்துக் கொண்டார். பின்னர் தினகரன் தரப்பு தலையெடுத்து 18 எம்.எல்.ஏக்களை வளைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்தது. அந்த 18 எம்.எல்.ஏக்களை அதிரடியாக தகுதி நீக்கம் செய்ய வைத்து ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார் முதல்வர் பழனிசாமி.
அதிமுகவில் ஒரே அணி
ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்தபோதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளராக மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தார். பின்னர் படிப்படியாக அதிமுகவில் அணிகளே கிடையாது என்ற சூழ்நிலையை வெற்றிகரமாக உருவாக்கி எல்லோரையும் தனக்கான ஆதரவாளர்களாக மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ்-ன் புதிய கலகம்
இந்த நிலையில்தான் அதிமுக செயற்குழுவில் திடீரென தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்பினார். இதற்கு எதிராக பொங்கிய எடப்பாடி பழனிசாமி, 3 ஆண்டுகால நல்லாட்சி கொடுத்திருக்கிறேன்.. இப்ப திடீர்னு முதல்வர் வேட்பாளரை மாற்றனும் என்றால் ஆட்சி மோசமாக நடக்குதுன்னு சொல்றீங்களா? என ஏகத்துக்கும் ஆவேசப்பட்டார்.
பின்வாங்கிய ஓபிஎஸ்
அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே செயற்குழுவில் ஆதரவு இருந்தது. இதன்பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற ஆலோசனைகளிலும் அதிமுகவினரைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவு இருந்தது. முதல்வர் பதவிக்கான ரேஸில் ஓபிஎஸ்ஸால் நெருங்கக் கூட முடியாத நிலை இருந்தது. பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கமே உறுதியாக நின்றனர்.
நினைத்தபடி சாதித்தார் ஈபிஎஸ்
இதனால்தான் வேறுவழியே இல்லாமல் பொதுச்செயலாளர் பதவி அல்லது வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும் என்ற 2,3வது கோரிக்கைகளில் கவனம் செலுத்தினார் ஓபிஎஸ். இப்போது அத்தனை தடைகளையும் தகர்த்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதுவும் கலகக் குரல் எழுப்பிய ஓபிஎஸ்ஸே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வரலாற்றில் நிச்சயம் இது பெருமைக்கும் பெருமிதத்துக்கும் உரிய தருணம்!