மெகா சீரியலான ஈபிஎஸ் - ஓபிஎஸ் சண்டை.. ஸ்டாலினின் “பிக் பிளான்”.. 2024 தேர்தலுக்கு இப்போதே “ஸ்கெட்சு”
சென்னை: 2022 ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கும் சூழலில் மறுபக்கம் பெரும்பான்மை பலத்தோடு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் திமுகவின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் அடுத்த தலைமுறையையும், அடிமட்டத்தையும் மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் 2 நாட்களே மீதம் உள்ள சூழலில் தமிழ்நாடு அரசியலை பொறுத்தவரை அதிமுகவில் இன்னும் நிலையற்ற தன்மை ஏற்படவில்லை. 6 மாதமாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அதிமுக யாருக்கு என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமியே முன்னிலை வகித்தாலும், எது எப்போது யார் கைக்கும் மாறும் என்ற குழப்பம் அக்கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகளுக்கே இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பல்வேறு வழக்குகள் கட்சி உரிமை சார்ந்தும், தலைவர்கள் மீதும் நிலுவையில் உள்ளன.

அதிமுகவுக்கு கடினமான ஆண்டு
வரும் 2023 ஆம் ஆண்டும் அதிமுகவுக்கு கடினமானதாகவே இருக்கும் என தெரிகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கை தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆனால், மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவை எடப்பாடி பழனிசாமியே வைத்து வருகிறார்.

டெல்லியை எதிர்க்கும் எடப்பாடி
டெல்லியின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லியையே எதிர்க்க துணிந்துவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் அவர் தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ பாஜகவின் விசுவாசியாகவே தன்னை காட்டிக்கொள்ள முனைகிறார்.

மன்னார்குடி குடும்பம்
மறுபக்கம் வி.கே.சசிகலா அதிமுகவுக்காக காய் நகர்த்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான எதிர்ப்பை கைவிட்டு அனைவரும் ஒன்றாக வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மன்னார்குடி குடும்பத்தினருக்கு அதிமுகவில் இடம் இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.

தனிக்காட்டு ராஜாவாகும் திமுக
இப்படி எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையிலான அதிமுக உட்கட்சி பூசல் மெகா சீரியலாக தொடர்ந்து வரும் அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தனிக்காட்டு ராஜாவாக உயர்ந்து நிற்கிறது திமுக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வு போன்ற குற்றச்சாட்டுகளை கடந்து பெரிதாக மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் எதுவும் இல்லை.

2024 தேர்தலுக்கு தயார்
தேர்தலுக்கு இல்லாத நேரத்தில் அரசு எடுத்த இந்த முடிவுகள் பெரிதாக கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. எனவே பெரிய நெருக்கடிகள் ஏதுமின்றி கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்று வரும் மு.க.ஸ்டாலின், வரும் 2023 ஆண்டிலேயே 2024 பிரதமர் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விடுவார் என்று எதிபார்க்கப்படுகிறது.

கட்டமைப்பை தொடங்கும் திமுக
இதற்காக 2023ன் தொடக்கத்திலேயே வாக்குச்சாவடி மட்டத்தில் இருந்து கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த முயன்று வருகிறார். அத்துடன் ஏற்கனவே உள்ள கூட்டணியையும் வலுவாக அவர் தக்க வைத்து வருகிறார். அதேபோல், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்
எதிர்க்கட்சிகள் மத்தியிலிருந்து விமர்சனங்கள் வந்தாலும், திமுகவின் எதிர்கால நலன் கருதி அடுத்த தலைமுறையை இப்போதே அவர் கட்டமைக்க தொடங்கிவிட்டதாகவே கூறுகின்றனர். விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் கூர்ந்து நோக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் அனைத்து மாவட்டங்கள், நகரங்கள் தோறும் சுற்றுப்பயணம் செல்வார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உரிமைத் தொகை
பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழ்நாடு சற்று மீள தொடங்கினாலும் 2024 வரை விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடி ஸ்டாலினுக்கு உள்ளது. ஆனால், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழக்கும் திட்டத்தை தவிர்த்து இதர வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதால் மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு நற்பெயரே உள்ளது.

மகளிர் வாக்குகள்
தற்போது ஏற்பட்ட பெருமழை வெள்ளத்திலும் தமிழ்நாடு அரசின் செயல்பாடு மக்களை கவர்ந்து ஈர்த்து உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல்களில் வாக்களிப்பவர்களில் 72 - 73 விழுக்காடு பெண்கள் என்பதால் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே அவர்களை ஈர்க்கும் வகையில் ரூ.1,000 ஊக்கத் தொகை திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications