அடக்க முயலும் ஆண்டிபயாட்டிக்குகளும், ஆட்டம்காட்டும் அட்வான்ஸ்ட் கிருமிகளும்..!
யாருக்கு ஃபோனை போட்டாலும்...லொக், லொக்... உங்களுக்கு தொடர் இருமல் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.. இது கொரோனாவாகவும் இருக்கலாம் என்ற மத்திய அரசின் பீதி அறிவிப்புதான் ரிங் டோனாக கேட்கிறது. அதன்பிறகுதான் ஃபோனில் ரிங்கே போகுது. அந்தளவுக்கு நாடே கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது.
Recommended Video
முன்பெல்லாம் சாதாரண சளி, காய்ச்சல் ஏற்பட்டதென்றால் சுக்கு, மிளகு, திப்பிலி இத்யாதிகளைப் போட்டு கஷாயம் காய்ச்சி குடிப்பதுண்டு. ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கஷாயம் என்றாலே வெகு தூரம் ஓடிவிடுகிறார்கள். கசந்து கிடக்கும் கஷாயத்தின் மீது அவர்களுக்கு அவ்வளவு கடுப்பு!
எனது ஃபிளாட்டிற்கு நேரெதிரில் கோவையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அண்மையில் ஒரு நாள் மாலை நேரத்தில் 6-வது படிக்கும் மகளை தந்தையும், தாயும் துரத்த, அந்த பெண் பால்கனியில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் இந்த கலாட்டா தொடரவே, என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தேன். பிள்ளைக்கு ஏதோ வயிற்றுப் பிரச்சனையாம். அதற்கு தாயார் கஷாயம் தயார் பண்ணிக் கொடுக்க முயன்றதன் விளைவுதான் இவ்வளவு அட்டகாசங்களும். கடைசியில் நான் எனது பங்கிற்குக் கெஞ்சோ கெஞ்சென கெஞ்ச, போனால் போகிறதென்று பாதியைக் குடித்தாள் அந்தப் பெண். குடிச்சுட்டு அந்த பொண்ணு என்ன சொன்னா தெரியுமா?
என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா... இந்த காலத்தில் போய் கஷாயம் அது இதுண்ணு ஏம்மா கொடுமைப்படுத்தறீங்க? பேசாமல் டாக்டரிடம் போனால் ஆண்டிபயாடிக்ஸ் கொடுப்பாரு. அதைப் போட்டால் சரியாப் போகுது. அதை விட்டிட்டு இப்படி படுத்தறீங்களே! என்றாள்.
உண்மைதான். இன்றைக்கு சிறு பிள்ளைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் ஆண்டி பயாடிக்ஸ் எனும் நோய் எதிர்ப்புச் சக்திக்கான மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆன்டிபயாட்டிக்ஸ் என்பது நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்கும் மருந்து. ஆனால் நாம் இதனை தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நுண்ணுயிர் தாக்கத்தின் விளைவாக நம்முடைய உடலில் சாதாரண ஜுரம் மற்றும் சளி ஏற்படுவதுண்டு. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் உரிய மருந்து எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் சரியாகிவிடும். இதுபோன்ற சாதாரண பிரச்னைகளுக்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளது. இந்த எதிர்ப்பு சக்தி உயிரணுக்கள் நம் உடலில் ஏற்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமியின் தாக்கத்தை எதிர்த்து போராடி அதனை அழிக்கும் வல்லமை கொண்டுள்ளன. ஆனால் இந்த ஒரு வாரப் பிரச்னையை தாங்கும் பொறுமை யாருக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய உடலுக்கு எது வந்தாலும் உடனடியாக சரியாக வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம்.
இதனால் பெரும்பாலானவர்கள் டாக்டரிடம் செல்லும் போதே, 'உடனடியா க்யூர் ஆகணும்' என்றுதான் வற்புறுத்துகிறார்கள். டாக்டர்கள் சும்மா இருப்பார்களா என்ன! அவர்களும் அதிகளவு டோசேஜ் மாத்திரையினை தருகிறார்கள். இதில் ஆன்டிபயாட்டிக்கும் அடங்கும். ஆன்டிபயாட்டிக் என்பது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளை குணப்படுத்த முடியாமல் போகும்போது அந்த சமயத்தில் கிருமிகளுடன் எதிர்த்து போராடி அதனை அழிக்க உதவக்கூடியது. எந்த ஒரு பிரச்னையும் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும்.
அதாவது காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் போது அது குறித்து ஆய்வும் எடுப்பது வழக்கம். அதில் டைபாய்ட், டெங்கு போன்ற பிரச்னையை கண்டறிந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கும். இது சாதாரண பிரச்னையாக இருக்கும் பட்சத்தில் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவே சிறு நீர் பாதையில் தொற்று ஏற்பட்டு இருப்பதை ஆய்வு மூலம் கண்டறிந்தால், அந்த சமயத்தில் ஆன்டிபயாட்டிக் எடுப்பது அவசியம்.
ஆன்டிபயாட்டிக் என்பது கொசு மருந்து போல. முன்பு நாம் காயில் கொசுவர்த்திதான் பயன்படுத்தி வந்தோம். இப்போது அதுவே லிக்விட்டாக மாறிவிட்டது. ஆனால் இந்த மருந்துக்கு கொசுக்கள் அடங்குவதில்லை. காரணம் அந்த மருந்தின் வீரியத்திற்கு ஏற்ப கொசுக்கள் தங்களை அப்கிரேட் செய்து கொள்கின்றன. அதனால் நாம் மேலும் வீரியம் மிகுந்த மருந்தினை அறிமுகம் செய்கிறோம். இதே தன்மைதான் ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுத்துக் கொள்ளும்போதும் ஏற்படும். நாம் அவ்வப்போது, காரணமில்லாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டால், நம் உடலில் உள்ள கிருமிகள் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும். அடுத்த முறை இந்த கிருமிகள் நம் உடலை பாதிக்கும்போது, முன்பை விட வீரியமான ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம்.
இதனால்தான், பலர் என்ன மருந்து போட்டாலும் 'இந்த தலைவலி சரியாகவில்லை' என்று புலம்புவார்கள். சாதாரண ஒரு தலைவலிக்கே இப்படி என்றால், மற்ற உடல் உபாதைகளை யோசித்து பாருங்கள். முதன்முதலில் பென்சிலின் என்ற ஆன்டிபயாட்டிக்கைக் கண்டுப்பிடித்தார்கள். அதுவரை ஆன்டிபயாட்டிக் என்பதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்யும் போது கூட ஆன்டிபயாட்டிக்கை பயன்படுத்த மாட்டார்கள். இதனால் நோயாளிக்கு எதிர்ப்பு சக்தியின் அளவு குறைவாக இருந்தால், அறுவை சிகிச்சை செய்யும் போது அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இறக்கவும் நேரிடலாம். ஆனால் பென்சிலின் கண்டுபிடித்த பிறகு, இறப்பு என்பது குறைந்துவிட்டது, அது நாள் வரை ஆன்டிபயாட்டிக் என்பதே கிடையாது.
ஆனால் இப்போது, பல வகையான ஆன்டிபயாட்டிக்ஸ் மார்க்கெட்டில் வந்துவிட்டன. மறுபக்கம் உடல் நிலையை காரணம் காட்டி ஆன்டிபயாட்டிக் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இது இப்படியே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் நமக்கு எந்த ஒரு மருந்தும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதற்காக ஆன்டிபயாட்டிக்கே கூடாதா என்று கேட்கலாம்? ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் டாக்டராகவே கொடுத்தால். அப்படி கொடுக்கும் போது, அவர் மூன்று நாட்களுக்கு அதனை மூன்று வேளை எடுத்துக் கொள்ள சொல்வார். அவர் சொன்னதை பின்பற்ற வேண்டும். சிலர் ஒரு நாளைக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுப்பார்கள், அப்படி எடுத்தால், நம் உடலில் உள்ள கிருமிகள் முற்றிலும் அழியாமல், அப்படியே தங்கிடும். இது மறுபடியும் உடல் உபாதைகள் ஏற்பட காரணமாகும்.
சின்னச் சின்ன சுத்தம் சார்ந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே நோய் தொற்று ஏற்படுவது குறையும். இனிமேல் வரப்போகிற தலைமுறையினருக்கு நாம் தொற்று அல்லாத வாய்ப்பினை அமைத்து தர வேண்டும். இல்லை என்றால் இதுவே அவர்களுக்கு முக்கிய பிரச்னையாக அமைந்துவிடும். இப்படியே விட்டுவிட்டால் நாம் இந்த கிருமிகளை அழிக்க விடாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோய்க்கான மருந்தினை பொறுப்போடு சாப்பிடுவது மட்டும் அவசியம் இல்லை. நம்மை சுற்றி பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை வளராமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். உயிர் காக்கும் ஆன்டிபயாட்டிக்கினை தேவையான நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். காரணம் அவை உடலுக்கு தேவையான பாக்டீரியாவையும் அழிப்பதால், எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் பொது சுகாதாரத்தில் நிஜமான அக்கறையுள்ள மருத்துவர்கள்.
கிருமிகளை அழிக்கும் விஷயத்தில் நாம கொஞ்சம் கருமியாகத்தான் இருக்க வேண்டும். அப்பால் போ சாத்தானே... என்று ஆன்டிபயாட்டிக்குகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டால் அப்புறம் நம்ம உடலில் உள்ள கிருமிகள் சிட்டி ரோபோ மாதிரி அப்கிரேட் ஆகி நமக்கே ஆட்டம் காட்ட ஆரம்பித்துவிடும், உஷாரா இருங்கள்.
- கௌதம்