தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டங்கள்... இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக பொதுவிடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதால் போராட்டங்களை கைவிடுமாறு அந்த கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஒரு மாதம்
குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஷாகின்பாக் வழி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் சி ஏ ஏ எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால், தமிழகத்தின் பல இடங்களிலும் இஸ்லாமிய பெருமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். ஆங்காங்கு டெல்லி ஷாகின்பாக் வழி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆதரவு
சென்னை வண்ணாரபேட்டை, மண்ணடி, பல்லாவரம், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டணம், திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம், கூத்தாநல்லூர், கோவை ஆத்துப்பாலம், திருச்சி பாலக்கரை, மதுரை கோரிப்பாளையம், என பல இடங்களில் கடந்த ஒரு மாதமாக இடைவிடாத வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனோ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என இஸ்லாமிய கூட்டமைப்புகள் முடிவு செய்தன. இதையடுத்து அந்த முடிவை வெளியிட்டுள்ள இஸ்லாமிய கூட்டமைப்புகள் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டங்களை கைவிடுமாறு அழைப்பு விடுத்துள்ளன.
போராட்டம்
மேலும், தமிழகத்தில் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக என்.பி.ஆர். கணக்கெடுப்பை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் அதனை கருத்தில் கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வரும் காலத்தில் ஒருவேளை மீண்டும் என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தினால், இப்போது நடைபெற்ற போராட்டங்களை காட்டிலும் பல மடங்கு வீரியமான போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பலமுறை முயற்சிகள் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய கூட்டமைப்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஜமாத்துல் உலமா சபை, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.