அதிமுகவை உதறினார் திருநங்கை அப்சரா ரெட்டி.. மகளிர் காங். தேசிய பொதுச் செயலாளராக நியமனம்
Recommended Video
சென்னை: அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த பிரபல திருநங்கையும், பத்திரிகையாளருமான அப்சரா ரெட்டி அக்கட்சியை விட்டு விலகி விட்டார். காங்கிரஸில் இணைந்துள்ள அவருக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பதவியை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.
பத்திரிகையாளர், சமூக சேவகர், டாக் ஷோ தொகுப்பாளர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் திருநங்கை அப்சரா ரெட்டி. தான் சார்ந்த சமூகத்திற்காக தொடர்ந்து களமாடி வருபவரும் கூட. இவருக்கு காங்கிரஸ் கட்சி புதிய பெருமையை கொடுத்துள்ளது. அப்சரா ரெட்டியை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார்.
இதற்கு முன்பு அதிமுகவில் இருந்து வந்தார் அப்சரா ரெட்டி. மறைந்த ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் அப்சரா ரெட்டி. மேலும் ஜெயா டிவியில் ஒரு ஷோவையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் அதிமுகவை விட்டு விலகியுள்ள அப்சரா ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
கட்டுப்பெட்டியான குடும்பத்தில் பிறந்தவர் அப்சரா ரெட்டி. இளம் வயதில் அவரது உடலியல் மாற்றங்களை குடும்பத்தினரே வெறுத்து இவரை ஒதுக்கினர். பின்னர் இவர் தணிந்து பாலின அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு திருநங்கையாக மாறினார். ஆஸ்திரேலியாவில் படித்துள்ள அப்சரா ரெட்டி, பத்திரிகையாளராக, சமூக சேவகராக, பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்தும் போராளியாக வலம் வருபவர்.
அவருக்கு முதல் அங்கீகாரம் கொடுத்த கட்சி என்ற பெருமை ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் உண்டு. அதேசமயம், தற்போது தேசிய அளவில் அப்சரா ரெட்டிக்கும், அவர் சார்ந்த சமூகத்திற்கும் காங்கிரஸ் கட்சி புதிய கெளரவத்தைக் கொடுத்துள்ளது.