இறையன்பு எச்சரித்தும் இன்று வரை தொடரலாமா?.. முதல்வரே நடவடிக்கை எடுங்க.. அறப்போர் இயக்கம் பரபர ட்வீட்
சென்னை: சாலை மேல் சாலை போட்டதால்தான் இந்த வீட்டுக்குள் தண்ணீர் போனதற்கு முக்கிய காரணம் என அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் எந்த துறையில் ஊழல் நடந்தாலும் அதுகுறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு கொண்டு செல்லும் இயக்கம் அறப்போர் இயக்கம் ஆகும். போதிய ஆதாரங்களுடன் நிறைய துறைகளில் உள்ள ஊழல்களை வெளியுலகத்திற்கு கொண்டு வந்தது இந்த இயக்கம்.
அண்மையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்டோர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்ததாகவும் அதற்கான ஆவணங்களையும் இந்த இயக்கத்தினர் டிவிஏசி அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
ரூ.2.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு: பணம் வழிப்பறி என தாய் பொய்ப்புகார்: 2 பெண்கள் கைது
தனியார் நிறுவனம்
அது போல் மின்சாரத்தை தனியார் நிறுவனத்திடம் வாங்கியது கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்ததாகவும் புகார் அளித்தனர். அது போல் கேபி பார்க் கட்டுமான பணியில் ஊழல் நடந்ததாகவும் பல்வேறு ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கத்தினர் வெளிக் கொண்டு வந்தனர்.
கனமழை
இந்த நிலையில் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்துவிட்டது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். புறநகர் பகுதிகள், வடசென்னை பகுதிகளில் இடுப்பளவு நீரால் மக்கள் இன்னலுக்குள்ளாகியுள்ளார்கள்.
சாலைகள் அமைத்தல்
இதற்கு காரணம் தரமாற்ற சாலைகளே என கூறப்படுகிறது. சாலைகளை அமைக்கும் போது ஏதேனும் ஒரு பகுதியை உயரமாக அமைத்துவிட்டு மற்றொரு பகுதியை தாழ்வாக அமைத்தாலும் அனைத்து மழைநீரும் தாழ்வான பகுதிக்கு ஓடிவந்துவிடும். இதனால்தான் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சென்னை மாநகராட்சி சார்பில் சாலைகளின் தரத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சாலையை பெயர்த்தல்
மேலும் புதிய சாலை அமைக்கும் போது ஏற்கெனவே உள்ள சாலையை பெயர்த்துவிட்டு போட வேண்டும் என்றும் சாலை மேல் சாலை போட்டால் அந்த பகுதி உயர்வாகிவிட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ட்விட்டர் பக்கம்
ஆனாலும் சென்னையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதற்கான காரணத்தை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த வீட்டுக்குள் தண்ணீர் போனதற்கு முக்கியகாரணம் சாலையை பேற்று எடுக்காமல் சாலை மேல் சாலை போட்டு உயரத்தை அதிகரித்ததும் அதன் பின் நடந்த ஊழல்களும். தலைமை செயலர் சுற்றறிக்கைக்கு பிறகும் சாலை உயரத்தை அதிகரிப்பது இன்றுவரை நடக்கிறது என்பதை முதல்வர் @mkstalin உணர்வாரா? நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல் புகார்
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் சாலை போடும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொண்டார். அப்போது விடப்பட்ட டெண்டரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் ஏற்கெனவே புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.