கோவில் வருமானத்தை தொடாதீங்க.. நீங்கள் மதவெறி கொண்டவரா? கொதித்த பிடிஆர்.. விளக்கதோடு பதிலடி
சென்னை: கோவில் வருமானத்ததை தொடாதீங்க எனக்கூறிய ஹிந்து பெயர் கொண்ட நபரின் பதிவை சுட்டிக்காட்டி நீங்கள் அறிவற்ற மதவெறி கொண்டவர்களா? அல்லது வேண்டுமென்றே வகுப்புவாத வெறுப்பை தூண்ட முயற்சிக்கிறீர்களா?' என கேள்வி எழுப்பி அதற்கான பதிலை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். தமிழகத்தின் நிதி நிலை பற்றி பாஜகவினர் விமர்சனம் செய்வதற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் கூட திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து இருந்தார்.

விவாதமான பிடிஆர்
இதனால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினர் இடையே அடிக்கடி வார்த்தை போர் வெடித்து வருகிறது. தற்போது இலவச திட்டங்கள் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக தலைவர்களின் கருத்துக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கடும் வார்த்தைகளால் மத்திய அரசை விமர்சனம் செய்தார். இது பெரும் விவாதப்பொருளாகி டிரெண்டானது.

பிடிஆர் பேட்டி
இந்நிலையில் தான் சமீபத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்த பேட்டியில், ‛‛அரசியல் என்பதுமக்களின் நன்மைக்கானது. இதனை மதத்தோடு கலக்க வேண்டாம். இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் வாய்ப்புகள் பறிக்கப்படும்போது அவர்களுக்காக போராடலாம். இது மனித உரிமைக்காக குரல்கொடுப்பது போன்றதாகும். இங்கு வந்து இந்துக்களுக்கு எதிரான நடக்கிறார்கள் என்று சொல்பவர் மடையனாக இருக்க வேண்டும். என் தாத்தா சபரிமலை ஐய்யபன் கோயிலில் சிலை வைத்தார். கோவில்களுக்கு குடமுழுக்கு செய்தார். என் தந்தையும் அதனை பின்பற்றினார். அவர்களின் வழியில் நானும் செயல்படுவேன்'' என கூறியிருந்தார். இந்த வீடியோவும் இணையதளத்தில் டிரெண்டானது.

பாஜகவினர் பதிவு
இதையடுத்து தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியை தமிழக அரசு பயன்படுத்துகிறது. இதனை நிறுத்த வேண்டும் எனும் வகையில் பாஜகவினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பாஜகவினர் சமூகவலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர்.

ஹிந்தி பெயர் கொண்ட ஐடி கேள்வி
இந்நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியை தொடர்ந்து டுவிட்டரில் ஒருவர் ‛ஹிந்தி மொழியில்' பெயர் வைத்த ஐடியில் இருந்து ‛‛தமிழ் கோவில்களில் இருந்து கிடைக்கும் 6000 கோடிக்கும் அதிகமான வருவாயைத் திரும்ப கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதன் மூலம் மதத்திலிருந்து பிரிந்த அரசியலை செய்வாரா? அல்லது வெறும் கபட பேச்சாக தான் சொல்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.

பிடிஆர் பதிலடி
இதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொதித்தெழுந்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறைக்கு ஆண்டு பட்ஜெட்டில் நூற்றுக்கணக்கான கோடிகளை ஒதுக்குகிறது. கோவில்களில் இருந்து 1 ரூபாயை கூட எடுப்பதில்லை. கலாச்சாரவாதிகள் எனும் பெயரில் நீங்கள் அறிவற்ற மதவெறி கொண்டவர்களா? அல்லது வேண்டுமென்றே வகுப்புவாத வெறுப்பை தூண்ட முயற்சிக்கிறீர்களா?'' என கேள்வி எழுப்பி கடுமையாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications