எங்களை வாழ வைக்கும் தெய்வங்களே! சூடம் காட்டும் ‘லட்டு’ கடை முதலாளிகள்! ஓபிஎஸ்-இபிஎஸ் மோதலால் ஹாப்பி!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், வெற்றி கொண்டாட்டங்களின் போது பட்டாசு மற்றும் லட்டுக்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் பெரும் புயலாக வீசத் தொடங்கியுள்ள நிலையில், கட்சி பொதுச் செயலர் பதவியை பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதில் அவரது தரப்பினர் உறுதியாக இருந்த நிலையில் அதற்கு சாதகமான நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆனால் ஏற்கனவே முதல்வர் பதவி முதல்வர் வேட்பாளர் பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவி என அடுத்தடுத்து விட்டுக் கொடுத்து வந்த ஓ பன்னீர்செல்வம் தற்போது கட்சி பதவியையும் விட்டுக் கொடுக்க முடியாது என முரண்டு பிடித்து வருகிறார்.
போடுங்கண்ணே வெடிய.. ஆதரவாய் வந்த தீர்ப்பு! எடப்பாடி ஹாப்பி அண்ணாச்சி! குதூகலமான அதிமுக தொண்டர்கள்!
அதிமுக விவகாரம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவினை தாக்கல் செய்தார். கடந்த 25 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று தங்கள் தீர்ப்பினை வழங்கினர். அதில் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.
பழனிச்சாமி தரப்பு உற்சாகம்
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் அருகில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லட்டு விற்பனை
ஒவ்வொரு மாவட்டம் மட்டுமல்லாது ஒன்றியம் கிளைக் கழக அளவிலான நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் இருக்கும் கடைகளில் லட்டு ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு பதார்த்தங்களை வாங்கி பொது மக்களுக்கு விநியோகித்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் லட்டுகள் விட்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 1000 வாலா, 10,000 வாலா என சரவெடிகளையும் வாங்கி வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
கடை உரிமையாளர்கள்
தற்போது மட்டுமல்ல ஒற்றை தலைமையாய் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட போதும் அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் போதும் அடுத்ததாக நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி உதயகுமார் பதவி என அறிவிக்கப்பட்ட போதும், ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்களை அறிவித்தது என கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அதிமுகவில் கொண்டாட்டங்களுக்கு அளவில்லாமல் இருக்கிறது. இதனால் இனிப்பு விற்பனையும் பட்டாசு விற்பனையும் கணிசமாக உயர்ந்து இருக்கிறது.
கூடுதல் ஆர்டர்
தற்போது அல்ல கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாகவே இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. யார் எப்படி போனால் நமக்கு என்ன நமக்கு லட்டும் பட்டாசும் விற்றால் சரிதான் எனக் கூறுகின்றனர் கடை உரிமையாளர்கள். மேலும் அதிமுகவில் இன்னும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என தெரியாத நிலையில் தற்போது கூடுதலாக பட்டாசு மற்றும் லட்டு ஜிலேபி உள்ளிட்டவர்களுக்கு கூடுதலாக ஆர்டர் கொடுத்திருப்பதாகவும், அடுத்து உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்படும் என்பதால் அந்த தீர்ப்பு வரும் தேதியில் கூடுதல் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாக லட்டு கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.