ஒரே நேரத்தில் 28 இடங்களில் DVAC ரெய்டு .. எங்கே இருக்கிறார் மாஜி அமைச்சர் கே சி வீரமணி? பரபர தகவல்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சமயத்திலேயே ஊழல் ஒழிப்பு திமுக சார்பில் வலுவாக முன் வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் மிகப் பெரியளவில் ஊழல் செய்துள்ளதாகவும் திமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், ஊழல் செய்த அதிமுக தலைவர்கள் மீது திமுக ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை சமயத்திலேயே தெரிவித்திருந்தார்.
மாஜி அமைச்சர்கள்
அதன்படி திமுக ஆட்சி அமைந்ததும் முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைகள் வேகம் பெற்றன. கடந்த ஆட்சியில் அறப்போர் இயக்கம், திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி ஆகியோர் அளித்த புகார்கள் தூசி தட்டப்பட்டன. அதன்படி இதில் முதலில் சிக்கியவர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.
அறப்போர் இயக்கம் புகார்
இப்போது இதில் அடுத்த சிக்கியுள்ளவர் அதிமுக ஆட்சியில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த கே சி வீரமணி. இவர் கடந்த 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. 2011ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில் பின்னர் 90 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளில் அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கே சி வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வேலூரில் வழக்குப்பதிவு செய்தனர்.
28 இடங்களில் சோதனை
அதன் அடிப்படையில் இன்று காலை 6.30 மணி முதலே அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணியின் வீடு உள்ளிட்ட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் 4 இடங்கள், திருப்பத்தூர் 15 இடங்கள், கிருஷ்ணகிரி, சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இடங்களிலும் டிஎஸ்பி தலைமையில் ரெய்டு நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ் பி வேலுமணி
கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் சோதனை நடைபெற்ற போது, வேலுமணி கோவையில் இல்லை. சட்டப்பேரவை அலுவல ஆய்வுக்குழு கூட்டம் என்பதால் அதிமுக கொறடா என்கிற முறையில் கலந்துகொள்ளச் சென்னை வந்திருந்தார் எஸ்.பி.வேலுமணி. அவரது ஆர்.ஏ.புரம் இல்லத்தில் ரெய்டு என்றவுடன் நேராகச் சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்துவிட்டார். D block 10 என்கிற எண்ணில் அவருக்கு அறை உள்ளது, ரெய்டு நடைபெற்ற போது அந்த இடத்தில் தான் அவர் தங்கியிருந்தார்,
எங்கே இருக்கிறார் மாஜி அமைச்சர்
தற்போது முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், இப்போது அவர் எங்கே உள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கே சி வீரமணி திருப்பத்தூரில் உள்ள வீட்டிலேயே இருக்கிறார். அதிகாலையிலேயே இந்த ரெய்டு தொடங்கிவிட்டதால், அவரால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. இந்த ரெய்டில் சிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.