டீச்சர் ஆக ஆசையா? உடனே ஒரு அப்ளிகேஷனை போடுங்க - பி.எட். மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்
சென்னை: தமிழ்நாட்டில் பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளநிலையில் கல்வியியல் (பி.எட்) படிப்புகளுக்கு 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன.
இதில் தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம், பொருளியல், வணிகம், அரசியல் அறிவு ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பி.எட் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பப்பதிவு
இந்த நிலையில் நடப்பு 2022 - 2023 கல்வியாண்டிற்காக மாணவர் சேர்க்கை பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இந்த 10 பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் படித்த மாணவர்கள் பி.எட். படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக நடைபெறும் இந்த விண்ணப்பப்பதிவு அக்டோபர் 3 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?
http://www.tngasaedu.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பி.எட். படிப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிப்பதற்கு பொதுப்பிரிவினர் ரூ.500, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

விருப்ப கல்லூரிகள்
இன்று மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளின் பட்டியலை குறிப்பிட்டு சான்றிதழை பதிவேற்றம் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு அக்டோபர் 6 ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கலந்தாய்வு எப்போது
விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டு உள்ள இணையதளத்தில் கல்லூரிகள், இடங்களின் எண்ணிக்கை விபரங்களை அறிய முடியும். தனியார் கல்லூரிகளில் சேர விரும்பு மாணவர்கள் அவற்றுக்கென இருக்கும் இணையதளத்தில் அணுகலாம். கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications