பாலகிருஷ்ண ரெட்டி நாளை மேல்முறையீடு.. தண்டனை நிறுத்தி வைப்பு
சென்னை: பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
1998ம் ஆண்டு ஓசூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனமும் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், பாலகிருஷ்ணரெட்டிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் பதவி வகிக்கமுடியாது. இதனால் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள பாலகிருஷ்ண ரெட்டி, தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன், மேலும் போராட்டம் நடந்த இடத்தில் நான் இல்லை என்று தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு எதிராக நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பாலகிருஷ்ண ரெட்டி முறையிட்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பேருந்து கல்வீச்சு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதால் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியில் தொடர முடியாத நிலை உள்ளது. அமைச்சர், எம்.எல்.ஏ பதவியில் நீடிக்க முடியாத நிலையே உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.