ஓபிஎஸ்ஸின் "அடிமடியிலேயே".. 25,000 பேர் - மதுரையில் சுற்றும் “பென்ஸ்” பஸ்கள்.. மாஸ் காட்டும் எடப்பாடி
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றதில் இருந்து இன்று முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு சென்றுள்ள நிலையில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் தலா 25,000 பேரை கூட்டி பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள, எடப்பாடி தரப்பினர், மதுரை முழுவதும் இந்த பொதுக்கூட்டங்களை விளம்பரப்படுத்த பாரத் பென்ஸ் சொகுசு பேருந்துகளை உலாவ விட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க கடந்த ஜூன் மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அதன் விளைவாகவே முதல் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஜூலை 11ம் தேதி இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு! தலைவர் -பொதுச்செயலாளர்-பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்!
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. ஆனால், 2 வாரம் முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.
ஓபிஎஸ் சோர்வு
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பால் உற்சாகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது சோர்வடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரையில் எடப்பாடி
மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியோ வேகமாக காய்களை நகர்த்தி வருகிறார். இன்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு செல்கிறார். சென்னையிலிருந்து காலை விமானம் மூலமாக புறப்பட்ட பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2 பொதுக்கூட்டம்
இதனை தொடர்ந்து கார் மூலமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். இதையடுத்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு அவர் புறப்படுகிறார். 5 மணியளவில் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்.
பலே ப்ளான்
எடப்பாடி பழனிசாமியின் எதிர்கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டமான தேனியை சேர்ந்தவர். எனவே தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியை விட தங்களுக்கு பலம் அதிகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாபெரும் கூட்டத்தை திரட்ட எடப்பாடி பழனிசாமியின் தென்மாவட்ட ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பென்ஸ் பேருந்துகள்
இதற்காக 2 பொதுக்கூட்டங்களில் தலா 25,000க்கும் அதிகமானோரை கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பல்வேறு வகையில் விளம்பரங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக மதுரை மாநகரம் முழுவதும் பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு பேருந்துகளை உலவ விட்டுள்ளனர். அந்த பேருந்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பெயிண்டின் செய்யப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டபடி செல்கின்றனர்.