தலைவர் எத்தனையோ வாய்ப்பு கொடுத்துட்டாரு!.. ஆனாலும் இதை ஏற்க முடியாது.. பாஜக நிர்வாகி ட்வீட்
சென்னை: தலைவர் எத்தனையோ வாய்ப்புகளை கொடுத்தும் ஒருவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்வது எந்த விதத்திலும் ஏற்க முடியாது என யார் பெயரையும் குறிப்பிடாமல் அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார். எனவே அவர் காயத்ரியை சொல்கிறாரா இல்லை திருச்சி சூர்யா சிவாவை சொல்கிறாரா என தெரியவில்லை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளும் நியமனங்களும் மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மூத்த தலைவர்களை பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை கேட்டு கலந்தாலோசித்து எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் அண்ணாமலை குறித்து எந்த தலைவரேனும் காதும் காதும் வைத்தது போல் கருத்து கூறினாலும் அவர்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் அசிங்கப்படுத்தி வந்தனர். இந்தநிலையில்தான் காசி தமிழ் சங்கமம் விவகாரத்தில் அண்ணாமலை மீது காயத்ரி கோபத்தில் இருந்தது தெரியவந்தது.
கட்சிக்கு களங்கம்..காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்..பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி
காயத்ரி
இதற்காக காயத்ரியை இருந்தால் இரு இல்லாட்டி போய் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு கொரியோகிராப் செய் என சிலர் ட்விட்டரில் காயத்ரியை விமர்சித்திருந்தனர். இதற்கு காயத்ரி பதிலடி கொடுத்தார். இந்த பிரச்சினை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜகவுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக
அது போல் தமிழக பாஜக ஓபிசி அணியின் பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவா, பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டாக்டர் டெய்சி சரணுக்கும் இடையே நடந்த ஒரு ஆடியோ உரையாடல் வெளியாகியுள்ளது. அதில் டெய்சி சரண் தனது துறைக்கு கீழே ஒரு கமிட்டியை உருவாக்க சூர்யா சிவா எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
டெய்சி சரண்
அத்துடன் பெண் என்றும் பாராமல் டெய்சி சரணை மிகவும் ஆபாசமாக காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளில் சூர்யா சிவா விமர்சித்துள்ளது போல் அந்த ஆடியோ அமைந்துள்ளது. கடைசியாக "உன்னை கொன்று மெரினாவில் வீசுவேன்" என திருச்சி சூர்யா சிவா கொலை மிரட்டல் விடுப்பது போன்றும் ஆடியோவில் உரையாடல் உள்ளது.
ஆடியோ
இதனால் இந்த ஆடியோ குறித்து பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது வரை பாஜக நிகழ்ச்சிகளில் திருச்சி சூர்யா சிவா கலந்து கொள்ள வேண்டாம் என அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றைய தினம் ஒரே நாளில் இரு நிர்வாகிகள் மீது அண்ணாமலை எடுத்த நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமர் பிரசாத் ரெட்டி
இந்த நிலையில் இது குறித்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தலைவர் நிறைய வாய்ப்புகளை கொடுத்துவிட்டார். ஆனால் கட்சியில் தனக்கு கிடைத்த பதவியை துஷ்பிரயோகம் செய்வதை ஏற்க முடியாது. கட்சியின் நலனுக்காகவும் களங்கம் ஏற்படாமல் இருக்கவும் தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார். முதலில் தேசம், அடுத்து கட்சி, அதன் பிறகுதான் நாம் (சுயநலம்)! என அமர் பிரசாத் தெரிவித்துள்ளார். இவர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக காயத்ரியை சொல்கிறாரா இல்லை திருச்சி சூர்யா சிவாவை சொல்கிறாரா என தெரியவில்லை. ஆனால் காயத்ரி வெளிநாடு, வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவுத் தலைவராக இருந்தார். அது போல் திருச்சி சூர்யா சிவா தமிழ் மாநில பாஜக ஓபிசி அணியின் பொதுச் செயலாளராக உள்ளார். எனவே யார் துஷ்பிரயோகம் செய்கிறார் என்பதை அமர் பிரசாத் தெளிவாக கூறவில்லை. ஒரு வேளை இது இருவருக்கும் பொதுவானதாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.