திமுக கூட்டத்துக்கு ஆட்சேர்க்கும் பள்ளி கல்வித்துறை.. பாஜக தலைவர் அண்ணாமலை பரபர விமர்சனம்
சென்னை: திமுகவின் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து செல்ல பள்ளி பஸ்களை கொடுக்க சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்ட பணிகளை துவங்கி வைப்பதோடு, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
அரசியல் ரீதியாக கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றும் நோக்கத்தில் தான் இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக் மேட்’.. ஒரே லெட்டரில் 3 கேட் போட்ட ஸ்டாலின்.. என்னதான் செய்வார் பாவம்!
கோவையில் ஸ்டாலின் விழா
இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் கோவை புறப்பட்டு சென்றார். இன்று காலை கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சத்து ஏழாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பேசினார். மாலை 5 மணிக்கு பெள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் நடக்கும் கட்சி விழாவில் கலந்துக்கொள்கிறார். மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைய உள்ளனர்.
பள்ளி பஸ் பயன்பாடு என குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் விழாவுக்கு பொதுமக்களை அழைத்து செல்ல பள்ளிகளின் பஸ்கள் பயன்படுத்தப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்காக முன்கூட்டியே பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:
இதுதான் கல்வித்துறையின் பணியா?
‛‛இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் முதல் அமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? " என விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பூர்-ஈரோடு நிகழ்ச்சி
இன்று கோவையில் நிகழ்ச்சியை முடிக்கும் முதல்வர் ஸ்டாலின் கார் மூலம் திருப்பூர் செல்கிறார். நாளை காலை சிறு,குறு நிறுவனங்களின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். அதன்பிறகு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டியில் மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பிறகு 26ம் தேதி காலை 10 மணிக்கு பெருந்துறை நிகழ்ச்சியில் அரசு நலத்திட்டங்கள் வழங்கிவிட்டு சென்னை புறப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.