விடுதலைப் புலி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கமா?திருமாவளவன் எம்.பி.யை தகுதி நீக்கம் செய்ய பாஜக கோரிக்கை
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் செலுத்தி பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியப் பங்கு வகித்தவர்.
விடுதலைப் புலிகள், தமிழ்நாடு விடுதலைப் படை வரிசையில் 43-வது இயக்கமாக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ.
கருணாநிதி இரங்கல்
இலங்கை விமான படை குண்டுவீச்சு தாக்குதலில் சுப.தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். சுப.தமிழ்ச்செல்வன் மறைவின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய இரங்கல் பெரும் விவாதத்துக்குரியதானது. முதல்வராக இருந்த போது கருணாநிதி எழுதிய இரங்கல் செய்தி: செல்வா எங்கு சென்றாய்?
எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!
உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்? என எழுதியிருந்தார்.
திருமாவளவன் நினைவேந்தல்
இந்த நிலையில் இன்று தமிழ்ச்செல்வனின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுநாளான இன்று விசிக தலைமையகம் அம்பேத்கர் திடலில் அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்தினோம்! என தொல்.திருமாவளவன் தெரிவித்தார். மேலும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம் எனவும் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
ராஜீவ் காந்தி படுகொலை
இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களை படுகொலை செய்ய சதி செய்ததோடு, படுகொலையினை திட்டமிட்டு கொடுத்ததும் அந்த இயக்கத்தின் தலைவர் பிராபகரன் என்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேசதுரோகம்
இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொது வெளியில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்ற இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதும். படுகொலையை அரங்கேற்றிய நபரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தேச துரோகம்.இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவால்.
தகுதி நீக்கம் செய்க
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தின் படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட @thirumaofficial அவர்களை, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள காரணத்திற்காக மக்களைவை உறுப்பினர் பதவியிலிருந்து சபாநாயகர் ஓம் பிர்லா @ombirlakota அவர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினருக்கு வீர வணக்கம் செலுத்தி, முன்னாள் பிரதமரை படுகொலை செய்ய சதி செய்து திட்டமிட்ட ஒருவரை போற்றி கொண்டாடும் தொல்.திருமாவளவன் அவர்களை கைது செய்து சிறையிலடைக்க (4 வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை. கொஞ்சமாவது வெட்கம், மானம்,சூடு, சொரணையிருந்தால்(?) காங்கிரஸ் கட்சி @INCIndia இந்த கூட்டணியில் நீடிக்குமா? தமிழக அரசும், தமிழக காவல்துறையம் நடவடிக்கை எடுக்குமா? என கூறியுள்ளார்.