தப்புக் கணக்கு.. “அந்த ஐடியாவை அழிச்சிருங்க”.. எடப்பாடி & கோவுக்கு டெல்லி மேலிட தூதுவர்கள் அட்வைஸ்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் சார்பில் சில முக்கிய புள்ளிகள் சமீபத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, கடந்த தேர்தல் தொடர்பான டேட்டாவை காட்டி, பாஜக தலைமையின் விருப்பத்தை தெளிவாகச் சுட்டிக்காட்டி உள்ளனராம்.
பாஜக தலைமையின் விருப்பமான ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஈபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக மேலிடத்தில் இருந்து சில முக்கிய புள்ளிகள் எடப்பாடி பழனிசாமி அன் கோவை சந்தித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்ணைக் காட்டிய எடப்பாடி.. ஸ்கெட்ச் போட்ட வேலுமணி.. டிச.2ல் இருக்கு.. பலத்தைக் காட்ட 'பலே’ திட்டம்!
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், கட்சியை கைப்பற்ற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது அணியை பலப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி, பொதுக்கூட்டங்களை நடத்தி தனது பலத்தைக் காட்டி வருகிறார். 2024 தேர்தலை கருத்தில் கொண்டு இருவரையும் இணைத்து வைக்க டெல்லி பாஜக தலைமை வெகுவாக முயன்று வருகிறது.
பாஜக முயற்சி
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலமுறை தனியாக டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை சந்திக்க இரு தலைவர்களும் மறுத்து விட்டனர். பாஜக தலைமை ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் தனித்தனியாக இருந்தால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து மீண்டும் செயல்பட்டால் மட்டுமே பாஜகவுக்கு வாக்குகள் சிதறாமல் மொத்தமாக நமது கூட்டணிக்கே விழும் என்பது பாஜகவின் கணக்காக இருக்கிறது. ஆனால் இதற்கு எடப்பாடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
ஈபிஎஸ் முட்டுக்கட்டை
பாஜகவை சீண்டும் வகையிலும் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ்ஸோடு இணைந்தால் தான் அதிமுகவுக்கு பலம் என பாஜக தலைமை அவருக்கு அறிவுறுத்தி வரும் நிலையில், அதற்கும் பதிலடி கொடுத்துப் பேசி வருகிறார் ஈபிஎஸ். இந்நிலையில் தான் ஓரிரு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி, மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமான மாஜிக்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோரை பாஜக மேலிடம் சார்பில் சில முக்கிய புள்ளிகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
எதிரிகளுக்கு எளிது
கட்சிக்குள் பிரிவினை இருப்பது அனைவருக்கும் சிக்கல் தான், இது நம் யாருக்குமே பலன் தராது, எதிரிகளுக்குத்தான் நம்மைத் தோற்கடிப்பது எளிதாகிவிடும் என பாஜக தலைமை கருதுகிறது, நீங்கள் அதனை புரிந்துகொள்ள வேண்டும் என பாஜக மேலிடம் சார்பில் பேச வந்தவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் பிடி கொடுக்காமலேயே பேசியதாகத் தெரிகிறது.
நான் ரெடி
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதாவுக்கு வராத நெருக்கடியா? இரட்டை இலை முடக்கப்பட்ட போதும் தனி சின்னத்தில் போட்டியிட்டு, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியவர் ஜெயலலிதா. அப்போதே அவர் அணியில் இருந்தவன் நான். ஜெயலலிதாவுக்கு நேர்ந்த சூழல் தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. என்ன வந்தாலும் எதிர்த்து நிற்க நான் தயாராகவே இருக்கிறேன். அதிமுகவை பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம் எனக் கூறியிருக்கிறார் ஈபிஎஸ்.
நீங்க ஜெயலலிதா இல்லை
அதற்கு பாஜக புள்ளிகள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருந்தார்கள். அவர்களின் எழுச்சிக்கு அதுதான் காரணம், அந்த சூழலை இன்றோடு பொருத்திப் பார்த்து நீங்கள் முடிவெடுத்தால் பெரும் சரிவைச் சந்திக்க நேரிடும், அரசியலில் காலம், சூழல் ரொம்ப முக்கியம், அன்றைய அரசியல் நிலை வேறு, இன்று உங்களுக்குள் பிரச்சனை என்றால் எதிரிகள் தான் கொழுப்பார்கள் என எச்சரித்துள்ளனர்.
இந்துக்கள் ஓட்டு
மேலும், கடந்த தேர்தல் டேட்டாவையும் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் 15 சதவீத சிறுபான்மை வாக்குகள் திமுகவுக்கு கிடைத்தும், அதிமுக - பாஜக கூட்டணி 40 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதற்கு இந்துக்களின் ஓட்டு வங்கியே காரணம், இந்து ஓட்டு வங்கி அதிகமுள்ள கொங்கு மண்டலத்தில் தான் பெரும்பான்மை இடங்களை வென்றது அதிமுக கூட்டணி.
தப்புக்கணக்கு போடாதீங்க
கடந்த தேர்தலிலேயே அதிக சீட் வாங்கி விட்டோம், ஓபிஎஸ், தினகரன், பாஜக எல்லாம் தேவையில்லை என மனக் கணக்கு போட வேண்டாம். தினகரன் மட்டுமே உங்களது 25 தொகுதிகளின் வெற்றியைப் பறித்துவிட்டார். பாஜக கூட்டணி இல்லையென்றால் இந்துக்களின் வாக்கு வங்கி அதிகமாகச் சிதறியிருக்கும், கொங்கு மண்டலத்தில் நிலைமை மோசமாகியிருக்கும். எனவே, பாஜக, தினகரன் இல்லாமலேயே ஜெயிக்கலாம் என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.
2026 திட்டம் பனால்
நாடாளுமன்றத் தேர்தல் தானே, சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என அசட்டையாக இருக்காதீர்கள். அதிமுக ஒரே கட்சியாக போட்டியிடாமல் பல பிரிவுகளாக நின்றால் ஓட்டுகள் சிதறி ஈஸியாக திமுக ஜெயித்து விடும். மீண்டும் திமுக அதிக எம்.பிகளைப் பிடித்து விட்டால் அசைக்க முடியாத சக்தியாகிவிடும். பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் உங்கள் திட்டம் நொறுங்கிவிடும், இணைந்து செயல்படுவதற்கான வழியைப் பாருங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.