சட்டையை கிழித்து நாடகமாடாமல்.. சிங்கம் போல் வெளியேறிய ஆளுநர்.. இதுதான் தேசிய மாடல்.. பாஜக நாராயணன்
சென்னை: தமிழக சட்டசபையிலிருந்து சிலரை போல் சட்டையை கிழித்து கொண்டு நாடகமாடி வெளியே தனது இருக்கையிலிருந்து சிங்கம்போல் ஆளுநர் வெளியேறியதுதான் தேசிய மாடல் என பாஜக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபையில் கூட்டத் தொடரின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
அரசியலமைப்பு சட்டத்தை தயாரித்த அம்பேத்கரின் பெயரை கூட ஆளுநர் படிக்காமல் விட்டுவிட்டார். அது போல் சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்திய பெரியார், அண்ணா பெயரையும் படிக்காமல் விட்டுவிட்டார் என குற்றம்சாட்டப்படுகிறது.

தமிழக சட்டசபை வரலாறு
இந்த நிலையில் தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக நேற்று ஒரு சம்பவம் நடந்தது. அதில் ஆளுநர் பேசி முடித்ததும் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்காதது வேதனை அளிக்கிறது. இது மரபுக்கு எதிரானது. அவர் படித்த உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

அவைக் குறிப்பு
அதற்கு பதிலாக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அப்போது தனது தனிச் செயலாளரிடம் எதையோ கேட்ட ஆளுநர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறினார். இவர் வெளியேறிய வீடியோவை ஸ்லோமோஷனில் வெளியிட்டு பாஜகவினர் வைரலாக்கி வருகிறார்கள்.

அண்ணாமலை
ஐபிஎஸ் படித்தவர்களான அண்ணாமலையும் ஆர் என் ரவியும் திமுக அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறார்கள் என்றும் பாஜக நிர்வாகிகள் ட்வீட் போட்டு தீயாய் பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் ஒரு விஷயத்தை பதிவு செய்துள்ளார்.

சட்டை கிழிப்பு
அதில் அவர் கூறுகையில், சிலர் போல் சட்டையை கிழித்து கொண்டு நாடகமாடி வெளியேறாது, தன் இருக்கையிலிருந்து சிங்கம் போல் ஆளுநர் வெளியேறியது 'தேசிய மாடல்'. இவ்வாறு தனது ட்வீட்டில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநராக இருந்த வித்யாசாகர் தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் சட்டசபையில் களேபரம் நடந்தது. தனது கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலினை சபை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது தாம் தாக்கப்பட்டதாகவும், தம்முடைய சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதையடுத்து தனது சட்டை கிழிக்கப்பட்டதை வெளியே வந்து செய்தியாளர்களுக்கும் காண்பித்தார். அதிலிருந்து சட்டை கிழிப்பு சம்பவம் வைரலானது.












Click it and Unblock the Notifications