திருமாவளவனுக்கு பயம் வந்துவிட்டது.. கிண்டல் செய்யும் பாஜக நாராயணன்.. என்னாச்சு?
சென்னை: விசிக 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் தொல். திருமாவளவனில் பேச்சைப் பகிர்ந்து அவருக்குப் பயம் வந்துவிட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் விமர்சித்துள்ளார்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.
அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் தொல். திருமாவளவன் எம்பி பேச்சு இணையத்தில் வைரலானது.

தேசிய அரசியல்
இந்த நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், "அடுத்து 2024 மக்களவை தேர்தலில் தப்பித் தவறி பாஜக வென்று மீண்டும் ஆட்சியை அமைத்தால், அதன் பிறகு தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டிற்கும் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இந்த கூட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று தான்! அகில இந்தியா அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலும் தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் இருக்கிறது.

திருமா கோரிக்கை
காங்கிரஸ், பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும் என ஒரு சிலர் முயல்கின்றனர். ஆனால், திமுக அப்படிப்பட்ட முயற்சிக்குத் துணைநின்றுவிடக் கூடாது என உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை உருவாக்கினால் அது பாஜகவுக்கே சாதமாக அமையும். அப்போது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும். 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அமைக்கும் இடத்தில் கருணாநிதியைப் போல இருந்து முதல்வர் ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்பதே விசிக வைக்கும் கோரிக்கை" என்று அவர் பேசியிருந்தார்.

முதல்வர் சூசகம்
அதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், தான் தொல். திருமாவளவன் அன்புக்கு மட்டுமில்லை அவரது பேச்சுக்கும் கட்டுப்பட்டவன் என்று கூறிய அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியிருந்தார். கடந்த 2 நாட்களாகவே இந்த இரண்டு பேச்சுக்களும் தான் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்தச் சூழ்நிலையில், திருமாவளவனில் பேச்சைப் பகிர்ந்து அவருக்குப் பயம் வந்துவிட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் விமர்சித்துள்ளார்.

காங். திமுக உறவில் விரிசல்
இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் தனது ட்விட்டரில், "காங்கிரஸ் இல்லாத பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்கலாம் என்று ஒரு சிலர் முயல்கிறார்கள். தயவு செய்து அப்படிப்பட்ட முயற்சிக்கு திமுக துணை போய்விடக்கூடாது. காங்கிரஸ் இல்லாத ஒரு அணியைக் கட்டினால் அது பாஜகவுக்குச் சாதகமாக முடியும்' - தொல் திருமாவளவன். அவரது இந்த பேச்சிலிருந்து மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. 1) காங்கிரஸ் - திமுக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

அச்சம் அதிகமாகியுள்ளது
2) தொல் திருமாவளவனுக்கு பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகமாகியுள்ளது. 3) பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் 'தமிழர்களை' கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட 'அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே' முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார். தமிழா! தமிழா! இதுவல்லவோ தமிழின துரோகம்?" என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications