விடாமல் துரத்தும் ஜெ.மரணம்! முதல்வர் போடும் வளையம்! சிக்கப் போகும் சி.விஜயபாஸ்கர்! யார் சொல்றாங்க?
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த விசாரணை வளையத்தில் நிச்சயம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் மேலும் சிலரும் தப்பிக்க முடியாது என்றுதான் தெரிகிறது என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்னர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நீண்ட நாள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பிய நிலையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார்.
தொடரும் ரெய்டு! சிக்கலில் மாஜி அமைச்சர்? நட்டாவை சீக்ரெட்டாக சந்தித்த விஜயபாஸ்கர்! பாஜகவில் ஐக்கியமா
ஆறுமுகசாமி ஆணையம்
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது தற்போது விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் இன்று ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி இன்று தமிழக அரசிடம் தாக்கல் செய்தார். 2017ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில்,1,798 நாட்களுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சி.விஜயபாஸ்கர்
சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு கொடுக்கப்படும் விபர அறிக்கையுடன் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி, முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த விசாரணை வளையத்தில் நிச்சயம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் மேலும் சிலரும் தப்பிக்க முடியாது என்றுதான் தெரிகிறது என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் தான் சென்னை அப்போலோ மருத்துவமனை இருந்தது.
சிக்குவது உறுதி
அவர்தான் அங்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் அப்பல்லோ மருத்துவமனை நடந்த ரகசியங்களை அனைத்தையும் அறிந்த ஒரே நபர் விஜயபாஸ்கர் தான். சசிகலாவுக்கு எதுவும் தெரியாது ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகளின் படி பார்க்கும்போது விஜயபாஸ்கர் சிக்குவது உறுதி.
தப்பிக்க முடியாது
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து திமுக அரசுக்கு சட்ட வல்லுனர் குழு என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. சிபிசிஐடி விசாரணையா? சிபிஐ விசாரணையா அல்லது காவல்துறை விசாரணையா எந்த கோணத்தில் எப்படி விசாரிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அதே நேரத்தில் விரைவான நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் அந்த விசாரணை வளையத்தில் விஜயபாஸ்கர் மேலும் சிலர் தப்பிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார்.