ஈரோடு கிழக்கில் குவியும் பணம்..தேர்தல் ஆணையத்தில் குமுறிய பாஜக, அதிமுக.. மத்திய பாதுகாப்பு படை வருகை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகமாக நடைபெறுவதாக பாஜக, அதிமுக புகார் அளித்து உள்ளது.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெறுவதாக அதிமுக, பாஜக அளித்த புகாரை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2ஆம்தேதி நடைபெறுகிறது.
திமுக, அதிமுகவின் இரு அணிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டு தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் உள்ளன. இடைத்தேர்தல் பிரச்சார களம் இப்போதே அனலடிக்க ஆரம்பித்து விட்டது. சில வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவின் இரு அணிகளுமே வேட்பாளர்களை அறிவித்தாலும் இதுவரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். முறையான ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார். பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் தொகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.