எதிர்க்கட்சிகளின் கிண்டலுக்குள்ளான சென்னை 'ரோடு ஷோ'.. அதிருப்தியில் மோடி?
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக பிரதமர் மோடி சென்னையில் நடத்திய ரோடு ஷோவில் கூட்டம் சேராததால் திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே முடிக்கப்பட்டது. இதனால் மோடியின் ரோடு ஷோ பெரும் கிண்டலுக்குள்ளாகிவிட்டது. இது தொடர்பான தகவல்களால் தமிழ்நாடு பாஜக மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் அதி உச்சத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 6 முறை தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோரும் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பல்வேறு பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். கோவையில் வட இந்திய பாணியில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார். கோவையில் ரோடு ஷோ வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தலைநகர் சென்னையில் ரோடு ஷோ நடத்தி பலத்தை காட்டுவோம் என திட்டமிட்டது தமிழ்நாடு பாஜக. இதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடத்தப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை சிக்னல் தொடங்கி பாண்டி பஜார் வரையிலான இந்த ரோடு ஷோ 1 மணிநேரம் நடத்தப்பட திட்டமிட்டிருந்தனர். போலீசாரும் இதற்கு அனுமதித்தனர். பாஜகவினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் ரோடு ஷோ வெறும் 40 நிமிடத்திலேயே முடிந்தது. பாஜகவினர் எதிர்பார்த்தபடி கூட்டம் கூட்ட முடியாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதாம்.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டுக்கு டூர் போன மோடி, தேர்தல் வந்துவிட்டதால் உள்நாட்டில் டூர் செல்கிறார். சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் ஷோ என்றெல்லாம் சாடி இருந்தார். சமூக வலைதளங்களிலும் மோடியின் ரோடு ஷோ விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறது.
சென்னை ரோடு ஷோ குறித்த உளவுத் துறை தகவல்களைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர்களிடம் தமது கடுமையான அதிருப்தியை கோபக் குரலில் வெளிப்படுத்தினாராம். இனி வரும் பொதுக் கூட்டங்களில் என்ன செய்தாலும் கூட்டத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும் என கறார் உத்தரவையும் பிறப்பித்துள்ளாராம் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications