தமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்.. டெங்குவுக்கு சென்னையில் இரட்டைக் குழந்தைகள் பலி!
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் பல இடங்களில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு பரவி வருகிறது. சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டைக் குழந்தைகள் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுவது வழக்கம். தற்போது தமிழகத்தின் பல ஊர்களிலும் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்தால் இது நூற்றுக்கும் மேற்பட்டதாக இருக்கக் கூடும்.
பன்றிக் காய்ச்சலுக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தெரசா என்ற ஓய்வு பெற்ற ஆசிரியை பலியானார். இந்த நிலையில் தற்போது சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டைக் குழந்தைகள் பலியாகியுள்ளன.
மாதவரத்தைச் சேர்ந்த 7 வயது தீக்ஷாவும், தர்ஷனும் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு டெங்கு என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரு குழந்தைகளும் இன்று இறந்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவமனை தரப்பில் இந்த மரணம் டெங்குவால் ஏற்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சுகாதாரத்துறை செயலாளர் கோரிக்கை:
இதற்கிடையே, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், காய்ச்சல் வந்தால் மக்கள் பயப்படத் தேவையில்லை. மாறாக மருத்துவமனைக்கு உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டும். வெளியில் போய் விட்டு வந்தால் கைகளை நன்றாக கழுவுவது முக்கியம். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.
மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலி:
இதற்கிடையே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 83 பேரும்,டெங்கு காய்ச்சலுக்கு 8பேரும், பன்றி காய்ச்சலுக்கு 6 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மதுரை கருப்பாலை பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி வீரம்மாள் மற்றும் அனுப்பானடியை சேர்ந்த மீனாட்சி இருவரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் 2 பேர் ஆவர்.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.