திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை: முருகப்பெருமானின் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசாமி ஆலயத்திலும் ஐந்தாம்படை வீடான திருத்தணியிலும் நாள்தோறும் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார். இதே போல சக்தி பீடங்களில் முதன்மையான பீடமாக திகழும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிற்பகல் நேரத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆலயங்களில் இந்த அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பழனி தண்டாயுதபாணி கோயில் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார். இப்போது வரை அங்கு பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆட்டம் ஆரம்பம்.. இந்தியரை துப்பாக்கி முனையில் கடத்திய தாலிபான்கள்.. காபூலில் அட்டகாசம்.. பரபரப்பு
பக்தர்கள் தரிசனம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரம் பேர் தரிசனம் செய்வதற்காக சமயபுரம்மாரியம்மன் கோயிலை தேடி வருகிறார்கள். மிகவும் சிறப்புடைய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும்போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், இட வசதிகளை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக அன்னதானம் வழங்க வேண்டும் என தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
மூன்று வேலையும் அன்னதானம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்தபடியாக அதிக உண்டியல் வருவாய் உடையது. அதிகளவில் பக்தர்கள் வரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை இருந்து வந்தது. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் ,ஆகிய மூன்று கோயில்களும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
கோவில்களில் அன்னதானம்
சட்டசபையில் அறிவித்தது போல திருத்தணி, திருச்செந்தூர் முருகன் கோவில்களிலும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் அன்னதானத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பக்தர்களுக்கு பார்சல்
இத்திட்டத்தின்படி இன்று முதல் காலை, மதியம், இரவு என கோயில் திறந்து இருக்கும் வரையில் அன்னதானம் வழங்கப்படும். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலம் முடிவுக்கு வந்த பின்னர் காலையும் இரவும் டிபன் வழங்கப்படும் என்றும் பிற்பகல் நேரத்தில் உணவும் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்குமா
ஒருவரின் பசியைப் போக்குவதுதான் தானத்திலேயே சிறந்த தானமும். கோவில்களில் ஒருவேளை அன்னதானம் கொடுக்கப்பட்டாலும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைப்பதில்லை. 100 முதல் 200 பக்தர்களுக்கு மட்டுமே அன்னதானம் கொடுக்கப்படுகிறது. பெரிய கோவில்களில் அன்னதானம் கொடுப்பதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளும் இருப்பதில்லை. கர்நாடகாவில் உள்ள மஞ்சுநாதா ஆலயம், திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பிரம்மாண்ட சமையல் கூடமும் அன்னதான கூடமும் உள்ளது. அதுபோன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் கிடைக்க அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.