நீட் தேர்வு விலக்கு! முதல்படியில் நமக்கு வெற்றி! திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!
சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் முயற்சியில் முதல்படியில் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமைச்சர் கே.என்.நேரு இல்ல திருமண விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
நீட் தேர்விலிருந்து தமிழகம் நிச்சயம் விலக்கு பெறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

நேரு இல்ல விழா
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இல்ல மண விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திப் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் முயற்சியின் முதல் படியில் நாம் வெற்றிபெற்றிருப்பதாக தெரிவித்தார். நேற்றைய தினம் ஆளுநர் ரவியை சந்தித்து பேசிய போது, தமக்கும் சட்டம் தெரியும் என்றும் நீட் விலக்கு மசோதாவை இரண்டாவது முறையாக சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்ப முடியாது என்பதால் குடியரசுத் தலைவருக்கு நிச்சயம் அந்த மசோதாவை அனுப்பி வைப்பதாக ஆளுநர் கூறினார் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் தேர்வு விலக்கு
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இன்றும் இருப்பதாகவும் நிச்சயமாக நீட் விலக்கு என்ற நிலையை அடைந்துவிடுவோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசியதை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து விரைவில் விலக்கு பெறுவோம் என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

எப்போதும் பரபரப்பு
இதனிடையே அமைச்சர் நேருவை பொறுத்தவரை எப்போதுமே படபடவென ஒடி ஆடி வேலை செய்யக்கூடியவர் என்றும் அவர் ஒரு இடத்தில் சும்மா நின்று தாம் பார்த்ததில்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியின் சார்பில் எந்தவொரு பணியை முடிக்க வேண்டுமானாலும் தாம் முதலில் அழைப்பது கே.என்.நேருவை தான் எனக் கூறினார் ஸ்டாலின். தம்பி ராமஜெயம் இல்லை என்பதற்காக அமைச்சர் நேரு வருத்தப்படக் கூடாது என்றும் நாங்கள் எல்லாம் உங்களுடன் இருக்கிறோம் எனவும் கூறி ஆறுதல் தெரிவித்தார்.

கூட்டணிப் பேச்சு
இதேபோல் கூட்டணி விவகாரத்தை மிகத் திறமையாக கையாளக்கூடியவர் அமைச்சர் கே.என்.நேரு என்றும் அதனால் தான் ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தாம் நேருவை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். திருமண விழாவில் வாழ்த்தி பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியே சிரித்துப் பேசினாலும் உள்ளுக்குள் அமைச்சர் நேரு மீது எந்தளவு கோபத்தில் இருப்பார்கள் என்பதை தம்மால் அறியமுடிகிறது என ஸ்டாலின் கூறியதால் விழா அரங்கமே கலகலப்பாகியது.












Click it and Unblock the Notifications