7 தமிழர் விடுதலை- முதல்வர் விரைவில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பார்: அமைச்சர் ரகுபதி
சென்னை: ராஜீவ் படுகொலை வழக்கில் 29 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பார் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் பங்கேற்றார்.

மராத்தா வழக்கு
இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சட்ட அமைச்சர் ரகுபதி கூறியதாவது: இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பு (மண்டல் கமிஷன் வழக்கு) அடிப்படையில்தான் மராத்தா இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றமும் தீர்ப்பு கொடுத்திருக்கிறது.

69% இடஒதுக்கீடுக்கு பாதுகாப்பு
ஆனால் தமிழக அரசு இந்திரா சஹானி வழக்குக்குப் பின்னர்தான் 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி அரசியல் சாசனப் பாதுகாப்பையும் பெற்றது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து நேராத வகையில் ஏற்கனவே ஜனாதிபதி ஒப்புதலுடன் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆலோசனை விவரம்
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்குப் பின்னர் இடஒதுக்கீடு வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. தற்போதைய மராத்தா வழக்கின் தீர்ப்பு முழுவதையும் படித்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கருத்துகளை முன்வைப்பார்.

7 தமிழர் விடுதலை
தமிழக அரசைப் பொறுத்தவரையில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறது. ராஜீவ் படுகொலை வழக்கில் 29 ஆண்டுகள் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications