5 மாநில தேர்தல்கள்...வியூகம் வகுக்க அக் 26-ல் காங். பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்!
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம் வகுக்க வரும் 26-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்கிற கேள்விக் குறி எழுந்துள்ளது. மேலும் பஞ்சாப் தேர்தலில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பிருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
உ.பி. சட்டசபை தேர்தல்.. மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், ஸ்கூட்டி.. அறிவிப்புகளை அள்ளிதெளித்த பிரியங்கா!
மாநிலங்களில் காங்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மீதான கடும் அதிருப்தி நிலவுவதால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கக் கூடும் என்கிற கருத்துகளும் நிலவுகின்றன. மணிப்பூர், கோவாவில் காங்கிரஸ் சற்று செல்வாக்குடன் உள்ளது. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான். உ.பி.யில் சிங்கிள் டிஜிட் இடங்களைத்தான் காங்கிரஸ் பெறக் கூடும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.
அக்.26-ல் ஆலோசனை
இந்நிலையில் டெல்லியில் வரும் 26-ந் தேதி 5 மாநில தேர்தல்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி. இக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 5 மாநில சட்டசபை தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசிக்கப்பட உள்ளது.
உ.பி.யில் பிரியங்கா போட்டியா?
மேலும் உ.பி.யில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என கூறப்பட்டு வருகிறது. அத்துடன் உ.பி. முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாகவும் வரும் 26-ந் தேதி விவாதிக்கப்பட உள்ளது.
பஞ்சாப் நிலவரம்
அதேபோல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியில் நிலவும் உட்கட்சி பூசல்கள் குறித்தும் அன்றைய தினம் ஆலோசிக்கப்பட இருக்கிறது. பஞ்சாப்பில் அமரீந்தர்சிங் தனிக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன் என அறிவித்துள்ளார். அமரீந்தர்சிங்கின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வரும் 26-ந் தேதி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக காங். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.