மிரட்டும் மாண்டஸ் புயல்: மாமல்லபுரத்தில் தானாக கடலுக்குள் செல்லும் படகுகள்.. பதறும் மீனவர்கள்!
சென்னை: மாண்டஸ் புயல் நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க உள்ளது. புயல் காரணமாக தற்போதே கடல் சீற்றமாக காணப்படுகிறது.
வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது.
மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று புயலாக வலுவானது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக மாறியுள்ளது.
மாண்டஸ் புயல்.. 14 அடி உயரும் மெரினா அலைகள்.. மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சேதமாகிப்போன சோகம்
இன்று நள்ளிரவு முதல்
புயலாக வலுவிழக்கும் மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் நகரும் வேகம் 15 கிலோ மீட்டரில் இருந்து 12 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க விடிய விடிய கனமழை பெய்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்தது.
மாமல்லபுரத்தில் பலத்த காற்று
புயலின் தாக்கம் சென்னையில் கனமழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதை காண முடிகிறது. அதேபோல், புயல் கரையைக் கடக்கும் இடமான மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் படகுகளை அலையின் அரிப்பால் கடலை நோக்கி செல்கின்றன.
கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட படகுகள்
இதனால் படகுகள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் பதறியடித்த மீனவர்கள் படாத பாடு பட்டு படகுகளை கடல் நீரில் இழுத்துச்செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். புயல் நள்ளிரவு தான் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் இன்னும் அதிகரித்து படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்படலாம் என்று அஞ்சிய மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். டிராக்டரில் கட்டி படகுகளை கடலில் இருந்து தொலைவான பகுதிகளில் கொண்டு நிறுத்தி வருவதையும் காண முடிகிறது.
பாதிப்புகளை உடனுக்கு உடன் சீர் செய்ய
இதற்கிடையே, புயல் கரையைக் கடப்பதால் மக்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்த்து விட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்து காவல்துறையும் அறிவுறுத்தியுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்கு உடன் சீர் செய்ய சென்னை மாநகராட்சியும் முழு வீச்சில் தயாராக உள்ளது.