நெருங்கும் தீபாவளி.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியாகுமா? சொந்த ஊருக்கு செல்வோர் எதிர்பார்ப்பு
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன் பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படுமா என்று பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முன்பதிவு செய்யப்படும் சிறப்பு ரயில்களையும் அறிவிக்க வேண்டும் என்றும் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட விரும்பும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடினால்தான் சந்தோஷம். அதுவும் தீபாவளி, தை பொங்கல் பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடவே பலரும் விரும்புவார்கள். வேலை செய்யும் இடங்களில் இருந்து அடித்து பிடித்து பஸ், ரயில்களில் சொந்த ஊர் செல்வார்கள்.
தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வருகிறது. ஆகவே 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிட்டுள்ளனர்.
நெருங்கும் தீபாவளி பண்டிகை! பிரபல இனிப்பு கடைகளுக்கு டஃப் கொடுக்கும் ஆவின்! விலை பட்டியல் தெரியுமா?
ரயில் டிக்கெட்டுகள்
தென்மாவட்ட விரைவு ரயில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி, நாகர்கோவில் , கன்னியாகுமரி, செங்கோட்டை, மதுரை விரைவு ரயில்களில் காத்திருப்பு பயணி பட்டியலில் 220 முதல் 320 பேர் வரைக்கும் உள்ளார்கள்.
ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு கட்டிடம் உயர்த்தி வசூலிக்கப்படுகின்றன. இதனால் சிறப்பு ரயில்களையே பயணிகள் பெரிதும் நம்பி இருக்கின்றனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இன்னும் சிறப்பு ரயில்கள் அறிவிக்காதது பயணிகள் இடையே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
சிறப்பு ரயில்கள்
சிறப்பு ரயில்களையே பயணிகள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்ற நிலையில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும். எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோயிலுக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கூறியுள்ளனர்.
விரைவில் வெளியாகும்
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். விரைவு ரயில்களின் காத்திருப்பு பட்டியலை கணக்கிட்டு, கூடுதல் பெட்டிகள் இணைப்பது, முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது என, நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, தென் மாவட்டங்கள், கோவை வழி தடத்தில் சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.