அமமுக கூட்டணியும் உடைந்தது- தேமுதிக தனித்துப் போட்டி!
சென்னை: 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வடதமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் தென்தமிழகத்தில் 2 மாவட்டங்களிலும் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
திமுக கூட்டணியில் மாவட்ட நிர்வாகங்களே இடப் பங்கீடு குறித்து முடிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு குட்பை சொல்லிக் கொண்டிருக்கிறது திமுக மாவட்ட நிர்வாகங்கள்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அமமுக கூட்டணியும் உடைந்தது- தேமுதிக தனித்துப் போட்டி!
பாமக தனித்து போட்டி
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. திடீரென தனித்துப் போட்டி என அறிவித்தது. பாமகவைப் பொறுத்தவரையில் வட தமிழகத்தில் அதிக இடங்களில் போட்டியிட விரும்பும்; ஆனால் அதிமுகவோ தங்களைவிட கூடுதல் இடங்களை பாமகவுக்கு தரப்போவது இல்லை. இதனால்தான் பாமக தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது.
தேமுதிக தனித்து போட்டி
இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்திருந்த தேமுதிகவும் தற்போது தனித்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவுக்கு வட தமிழகத்தில் சற்று செல்வாக்கு இருக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் இருப்பை தேமுதிக காட்டியாக வேண்டியிருக்கிறது.
விஜயகாந்த் அறிக்கை
இதனால்தான் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. போட்டியிடுகிற விரும்புகிற அனைத்து நிர்வாகிகளும் தொன்டர்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுக்களை நாளையும் நாளை மறுநாளும் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ4,000; ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ2,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
திமுகவிடம் தேறாது
முன்னதாக திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் எனக் கூறப்பட்டது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கே உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. இதனால் அங்கு போய் எதுவும் கிடைக்காமல் ஏமாறமல் இருக்க தனித்தே போட்டியிடுவோம் என்கிற நிலைப்பாட்டை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.