குகையை விட்டு சிங்கம் வெளியே வந்து விட்டது இனி வேட்டை ஆரம்பம் - விஜயபிரபாகரன்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், அதிமுகவை விமர்சனம் செய்து பேசியுள்ளார். இனி வேட்டை ஆரம்பம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவிற்கு இனி இறங்குமுகம்தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். சிங்கம் குகையை விட்டு வெளியே வந்து விட்டது. இனி வேட்டைதான் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக 234 தொகுதிகளிலும் தோற்கும் என்று சொன்ன விஜயபிரபாகரன், அதற்கேற்ப இனி ஒவ்வொரு தேமுதிகவினரும் வேலை செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக ,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்த நிலையில் தேமுதிக இன்று அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. தொகுதி பங்கீடு கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினையால் தேமுதிக விலகியுள்ளது.
41 தொகுதிகள் கேட்ட தேமுதிக 23 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக- பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ரங்கசாமி ஜெயிச்சுருவாரா.. உள்ளடியிலிருந்து எப்படி தப்பப் போகிறார்.. பாஜக கணக்கு என்ன?
விஜயபிரபாகரன் பேச்சு
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், அதிமுகவுக்கு தான் இனி இறங்கு முகம்தான் என்று கூறினார். நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், இதுநாள் வரை கூட்டணி என்ற பெயரால் நமது கைகள் கட்டப்பட்டிருந்தன. இனி அப்படி இல்லை என்று கூறினார்.
சோம்பேறியாக்கிய அதிமுக திமுக
விஜயகாந்தை தனியாக பாத்திருப்பீர்கள், பிரேமலதாவை பார்த்திருப்பீர்கள். இரண்டு பேரையும் சேர்ந்த கலவையாக என்னை பார்ப்பீர்கள் என்று பேசினார். மக்களை சோம்பேறியாக்கவே அதிமுகவும் திமுகவும் மாறி மாறி 1000 ரூபாய், 1500 ரூபாய் என அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இனி வேட்டைதான்
என்னை சின்னப்பையன் என்று எல்லோரும் சொல்கின்றனர். நான் சின்னப்பையன்தான் ஆனால் பிரியாணி கொடுத்து ஆள் சேர்த்ததில்லை என்று சொன்னார். நீங்கள் என்ன எங்களுக்கு சீட் கொடுப்பது. இனி சீட்டுக்களை நாங்களே எடுத்துக்கொள்வோம் என்றார். சிங்கம் குகையை விட்டு கிளம்பி விட்டது. இனி வேட்டைதான் என்று விஜயபிரபாகரன் பேசிய போது தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.
அதிமுக தோற்கும்
தேமுதிகவைப் பற்றி பலருக்கும் சரியாக தெரியவில்லை. அதிமுக, திமுகவில் இரண்டு பெரிய ஆளுமைகள் இருந்த போதே தனியாக களம் கண்டிருக்கிறோம் என்று சொன்ன விஜயபிரபாகரன் அதிமுக 234 தொகுதிகளிலும் தோற்கும் என்று சொன்னார். அதற்கேற்ப இனி ஒவ்வொரு தேமுதிகவினரும் வேலை செய்வார்கள் என்றும் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.