”சீமான் வரட்டும்.. இல்ல நல்ல தம்பியா அனுப்புங்க!” விவாதத்துக்கு அழைக்கும் திமுக எம்பி செந்தில்குமார்
சென்னை: சீமானையோ அல்லது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவரையோ அதிகாரப்பூர்வமாக விவாதத்துக்கு அனுப்பி வைக்குமாறு தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்து இருக்கிறார்.
தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டர் கணக்கில் பரபரப்பாக இயங்கி வருபவர்.
ஏழுமலையானை தரிசிக்க குவியும் கூட்டம்..2 மாதத்தில் ரூ.250 கோடி உண்டியல் காணிக்கை
ட்விட்டரில் மக்களின் கோரிக்கைகளை கேட்டு உதவி வருவதுடன், அரசியல் கருத்துக்களையும், எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.
எம்.பி. செந்தில்குமார்
பாஜக, அதிமுகவுக்கு இணையாக நாம் தமிழர் கட்சி குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் செந்தில்குமார். அதேபோல் திமுகவுக்கு எதிராகவோ அல்லது தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ பிற கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். கடந்த மாதம் மின் தடை தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து இருந்தார்.
சீமான் ட்வீட்
"ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என பதிவிட்டிருந்தார். இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் ட்விட்டரில் பதிலளிக்க இருவருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் முற்றியது.
செந்தில்குமார் பதிலடி
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட செந்தில்குமார், "அதிபரே! உங்களுக்கு என்ன., என்ன வேண்டுமானாலும் கேட்பிங்க. ஆனா தப்பான விலாசதுல கேட்கிறீங்க. உங்களுக்கு படி அளக்க இது உங்க அதிமுகவும் கிடையாது. உங்க பாஜகவும் கிடையாது. இது உடன் பிறப்புகளின் திமுக. ஆமையின் வால் ஒட்ட நருக்கப்படும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படம்
இதற்கிடையே அண்மையில் வெளியான திமுக இளைஞரணி செயலாளர் நடித்திருந்த "நெஞ்சுக்கு நீதி" திரைப்படத்தை திமுகவினரும் பாராட்டி கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பெரியாரை நான் பார்த்ததில்லை. ஆனால், காக்கிச்சட்டையில் உதயநிதி அவர்களை பார்த்த பிறகு அப்படியே மெய்சிலிர்த்து பெரியாரை பார்த்ததுபோல்... பெரியாருக்கு வந்த சோதனை." என்றார்.
சீமான் சொல்வது பொய்
சீமானின் இந்த கருத்தை ட்விட்டரில் மறுத்துள்ள செந்தில்குமார், "பொய்யர் சீமான் பொய் மட்டும் தான் பேசுவார் என்பதற்கு இது சான்று. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமூக நீதி பேசும் படம் என்று தமிழர்கள் கொண்டாடும் திரைப்பாடம். ஆனால் நான் பதிவிடாத, சொல்லாததை கூச்சமே இல்லாமல் சொல்கிறார். அது சரி, குறைந்த பட்சம் மனசாட்சியுடன் பேச இவர் என்ன மானமுள்ள மானிடனா?" என்று காட்டமாக பதிவிட்டார்.
விவாதத்துக்கு அழைப்பு
இந்த நிலையில், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய தருமபுரி எம்.பி.செந்தில்குமார், "விவாதத்துக்கு சீமான் அவர்கள் வந்தாலும் சரி, அல்லது தருமபுரி எம்பியை யார் என்றே தெரியாது என சீமான் சொன்னால், இருப்பதிலேயே ஒரு நல்ல தம்பியாக தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அனுப்பி வையுங்கள். நானாக ஒருவரை தேர்வு செய்தால் வேறு ஏதாவது காரணம் சொல்வார்கள்." என்று விவாதத்துக்கு அழைத்திருந்தார்.
ஒருவரை அனுப்புங்க
அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள செந்தில்குமார், "இது வரை 36 பேர்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக திராவிட மாடல் குறித்து என்னிடம் விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். நான் எந்த அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது. சீமான் அவர்கள் வந்தால் மகிழ்ச்சி. அல்லது அவரே ஒருவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், நான் விவாதிக்க தயார்." என்று தெரிவித்துள்ளார்.