திமுக ராஜ்யசபா சீட்: நீண்டகால காத்திருப்பு.. கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு இந்த முறை கிடைக்குமா வாய்ப்பு?
சென்னை: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மூத்த வழக்கறிஞரும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு இந்த முறையாவது ராஜ்யசபா சீட் கிடைக்குமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனையடுத்து ஜூன் 10-ந் தேதி தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது.திமுகவில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஷ்குமார், அதிமுகவில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய எம்.பி.க்கள் பதவி காலம் முடிவடைகிறது.
தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா எம்.பிக்களை வாக்களித்து தேர்வு செய்வர். தற்போதைய சட்டசபை எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைக்கும்.
திமுகவைப் பொறுத்தவரையில் தற்போது பதவி காலம் முடிவடையும் 3 பேருமே மீண்டும் மற்றொரு வாய்ப்புக்கு முட்டி மோதுகின்றனர். மூவருமே கட்சி தலைமையிடம் நெருக்கமாக உள்ளவர்கள். அதேநேரத்தில் கட்சியின் சீனியர்கள் யாரேனும் ஒருவருக்கும் திமுக தலைமை ராஜ்யசபா சீட் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தில் பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படி! ஒரு பதவிக்கு 23 பேர் போட்டி! திமுக தலைமைக்கு தலைவலி!
ஆகப் பெரும் ஆளுமைகள்
திமுகவில் இன்னமும் சரியான அங்கீகாரம் கிடைக்காத ஏராளமான சீனியர்கள் உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் மூத்த வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அரசியல் வாழ்வுக்குச் சொதக்காரர். காமராஜர், கருணாநிதி, ஈவிகே சம்பத், நாராயணசாமி நாயுடு, கண்ணதாசன், வைகோ மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என ஆளுமைகளுடன் மிக நெருக்கமாக இருந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவராக, வழக்கறிஞராக, அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராக செயற்பட்டவர். 1985-ல் தமிழீழ சிக்கலை மிகப் பெரிய அளவுக்கு பேசுபொருளாக உருமாற்றிய திமுகவின் டெசோ அமைப்பிலும் அதன் மாநாட்டிலும் மிக முக்கியமான பங்களிப்பு செய்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
தேர்தல் களத்தில்..
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த மூத்த திமுக தலைவர் முரசொலி மாறன் உள்ளிட்டோரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 1989, 1996-ம் ஆண்டுகளில் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இரு தேர்தல்களிலும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முடியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியதில் முதன்மை பங்கு வகித்தார்.
சமூக செயற்பாடு- கருணாநிதி கைது
2001-ம் ஆண்டு அப்போதைய ஜெயலலிதா அரசால் கருணாநிதி கைது செய்யப்பட்ட மிட்நைட் அரெஸ்ட் அரங்கேறியது. அப்போது கருணாநிதி கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ காட்சிகளை கடும் நெருக்கடிகளுக்கு இடையே சன் டிவிக்கு கொண்டு சேர்த்தார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த ஒற்றை கேசட்தான் கருணாநிதி கைதின் போது நிகழ்ந்த அத்தனை அட்டூழியங்களையும் அம்பலத்துக்கு கொண்டு வந்தது. அத்துடன் மனித உரிமைகள், தமிழக வாழ்வாதார பிரச்சனைகள், நதிநீர் சிக்கல்கள், கூடங்குளம், விவசாயிகள் பிரச்சனை, மேற்கு தொடர்ச்சி- கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு என பல்வேறு சிக்கல்களில் வழக்குகளை தொடர்ந்து அலசி ஆராய்ந்து நூல்களாக இன்றளவும் முறைப்படுத்தப்பட்ட ஆவணங்களாக்கி பல வழக்குகள் தொடர்ந்து தீர்ப்புகளைப் பெற்று தந்துள்ளார் கே.எஸ்.ஆர்.
ஈழச் சிக்கல் முதல்வர் ஸ்டாலின்
இலங்கை தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் திமுகவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருந்த தருணம். அப்போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உரையாற்றவும் உறுதுணையாக இருந்தவர் கே.எஸ்.ஆர்.தான். 2019 லோக்சபா தேர்தலின் போது கனிமொழி, தூத்துக்குடியில் போட்டியிட்ட போது முக்கியமான பங்களிப்பு செய்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். திமுகவில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போல சீனியர்கள் பலருக்கும் முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பது பொதுவான ஆதங்கம். இந்த ஆதங்கத்தை போக்கும் வகையில் இம்முறை கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு ராஜ்யசபா சீட் தந்து ஒரு நம்பிக்கையை திமுக தலைமை உருவாக்கித் தரும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.