ஓபிஎஸ்ஸை நைஸாக ‘கார்னர்’ செய்த எடப்பாடி.. இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் பாதிப்பு இல்லையாம்! எப்படி?
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளும் களமிறங்குவதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும், அது அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், சுயேட்சை சின்னம் வழங்கப்படுவதால் அதிமுகவுக்கு பாதிப்பு இருக்காது என்று அடித்துச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் கலை.
இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில் நின்றபோதே தோற்றிருக்கிறார். சேவல் சின்னத்தில் நின்றபோது ஜெயித்திருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உதயசூரியன், இரட்டை ஆகிய சின்னங்கள் களத்தில் இருந்தபோதும் குக்கர் சின்னத்தில் நின்று வென்றார் டிடிவி தினகரன் என்று சுட்டிக்காட்டுகிறார் கலை.
மேலும், நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பின் கணக்குகள் பற்றியும் பேசியுள்ளார் பத்திரிகையாளர் கலை. அவரது பிரத்யேக பேட்டி பின்வருமாறு:
ஓபிஎஸை இயக்குவது திமுக தான்.. அதிமுக பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் சிறந்த வாய்ப்பு.. விஜயபாஸ்கர்!
நெருக்கடி கொடுத்ததே எடப்பாடி தான்
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். தேர்தல் களத்திலும் ஈபிஎஸ்ஸுக்கு எதிராக ஓபிஎஸ் போராட்டத்தை தொடங்கிவிட்டார் என எடுத்துக்கொள்ளலாமா?
பதில் : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கார்னருக்கு நகர்த்திவிட்டார். களத்தில் நின்றே ஆகவேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார். தமாகாவுக்கே சீட்டை கொடுத்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. அதிமுக வேட்பாளரே நிற்கிறார் என்று சொன்னதால், ஓபிஎஸ்ஸும் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஏனெனில், இரட்டை இலை சின்னத்தை கேட்க வேண்டும் என்றால், அவர் நின்றால் தான் கேட்க முடியும். இல்லையெனில் தானாகவே சின்னம் ஈபிஎஸ் கைக்குப் போய்விடும். தேர்தலில் நிற்கிறேன் எனச் சொல்லும் ஓபிஎஸ்ஸுக்கு பயமும் இருக்கிறது. பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிப்போம் என்கிறார். பாஜகவின் நீண்டகால திட்டம் என்னவென்றால், அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு தாங்கள் வர வேண்டும் என்பதுதான். இரண்டாவது இடத்தில் இருக்கும் கட்சியை காலி செய்துவிட்டு அந்த இடத்திற்கு வந்து அமர்வதுதான் பாஜக பாலிசி.
ஈபிஎஸ் பின்வாங்க மாட்டார்
கேள்வி : ஓபிஎஸ் இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் போட்டியிடமாட்டோம் என்று சொல்கிறார். இதன் மூலம் பாஜகவுக்கு போட்டியிடும் எண்ணம் ஏற்பட்டு அவர்கள் ஈபிஎஸ்ஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சூழல் ஏற்படுமே?
பதில் : மக்கள் செல்வாக்குள்ள அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தங்களை முன்னிறுத்துவதுதான் பாஜகவின் வியூகம். பாஜக போட்டியிடலாம் என்று கூறி இதற்கு ஓபிஎஸ் வழியமைத்துக் கொடுக்கிறார். இன்று இடைத்தேர்தலில் செய்யும் இந்த அணுகுமுறையையே அடுத்து வரும் தேர்தல்களிலும் பாஜக கையாளும். ஓபிஎஸ் நின்றால், இரண்டு அணிகளில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது தெரிந்துவிடும். நாங்கள் நிற்கிறோம் என பாஜக அழுத்தம் கொடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் தேர்தலில் நிற்பதில் உறுதியாக இருப்பார். இடைத்தேர்தலில் நிற்கிறோம் என அறிவித்துவிட்டார்கள். இதில் இருந்து எடப்பாடி பழனிசாமி நிச்சயம் பின்வாங்க மாட்டார்.
தமாகாவை தட்டிவிட்டது ஏன்?
கேள்வி : கடந்த பொதுத் தேர்தலில் தமாகா போட்டியிட்ட தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இப்போது போட்டியிடுவதற்கு என்ன காரணம்? கட்சி தன்னிடம் இருப்பதை நிரூபிப்பதற்காக களமிறங்குகிறாரா?
பதில் : அதிமுக தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் ஒருபக்கம், சசிகலா ஒருபக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலின் மூலம் தொண்டர்கள் உண்மையிலேயே யார் பக்கம் என்பது தெரிந்துவிடும். சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் கூட பரவாயில்லை என்று களத்தில் நிற்கிறார் ஈபிஎஸ். இந்தப் பக்கம் ஓபிஎஸ் நிற்கிறார். இந்த தேர்தலில் ஈபிஎஸ் அதிக வாக்குகள் பெற்றும், ஓபிஎஸ் மிகக்குறைந்த வாக்குகளையும் பெற்றால், தானாகவே ஓபிஎஸ் அணி காணாமல் போய்விடும். அதற்குப் பிறகு அவருக்கு வேலையில்லை. அதற்காகவே ஈபிஎஸ் களமிறங்குகிறார்.
வாக்கு வங்கி சிதறுமா?
கேள்வி : இரு அணிகளும் தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக்கொண்டால் கட்சியின் வாக்கு வங்கி சிதறத்தானே செய்யும்? எப்படி வெற்றி பெற முடியும்?
பதில் : ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக நிற்பது திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் ஆகிய மூவரும் இணைந்தாலும், அங்கு மிகக்குறைவான சதவீத வாக்குகளையே வாங்க வாய்ப்புள்ளது. அதேசமயம், திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வாக்குகள் சுமார் 20 சதவீதமாவது ஈபிஎஸ் அணிக்குக் கிடைக்கலாம். அதனால், ஓபிஎஸ் அணியால் வாக்குகள் பறிபோவதைப் பற்றி எடப்பாடி கவலைப்பட மாட்டார். பாஜகவும் தனித்து நின்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி வாக்கு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கும்.
பாஜக தனித்துப் போட்டி?
கேள்வி : ஈரோடு கிழக்கில் பாஜக தனித்துப் போட்டியிட வாய்ப்பிருக்கிறதா?
பதில் : பாஜக மாநில செயற்குழுவில் 50 சதவீதம் பேர் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதாகவும், 50 சதவீதம் பேர் போட்டியிட வேண்டாம் என்று சொல்வதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக எப்போதும் அவர்களாக முடிவெடுக்க மாட்டார்கள். மேலிடத்தில் கேட்டுத்தான் முடிவெடுப்பார்கள். செயற்குழுவில் வந்த கருத்துகளை டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள். ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் போட்டியிட்டால் பாஜக யாருக்கு ஆதரவு தருவது என்ற பிரச்சனையும் வருகிறது. பாஜகவுக்கு அது ஒரு பெரிய கேள்வி.
இரட்டை இலைக்கு சிக்கல்
கேள்வி : ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திற்கு நிச்சயம் சிக்கல் ஏற்படும். அதற்காகவே இருவரும் போட்டியிடுகிறார்களோ?
பதில் : கட்சி இரண்டாகப் பிளவுபடும்போது, எந்த அணியில் அதிக எம்.எல்.ஏக்கள்- எம்.பிக்கள் இருக்கிறார்களோ, எந்த அணியில் அதிக மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்களோ, எந்த அணியில் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த அணிக்குத்தான் கட்சி சின்னம் தருவது வழக்கம். உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வந்தால், தேர்தல் ஆணையம், ஈபிஎஸ் தரப்புக்குத்தான் சின்னத்தை கொடுத்தாக வேண்டும். தேர்தல் ஆணையம் 2017 செப்டம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வைத்தான் பதிவு செய்துள்ளது. அந்த பதவிக்காலம் 2022 செப்டம்பரோடு முடிந்துவிட்டது. 2021 டிசம்பரில் வழங்கிய தேர்வை ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. எனவே, ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளர் என்றும், ஈபிஎஸ்ஸை இணை ஒருங்கிணைப்பாளர் என்றும் தேர்தல் ஆணையம் கருதுவதே தவறு.
எடப்பாடி கையெழுத்து போடுவாரா?
கேள்வி : சின்னம் பெறுவதற்கான ஏ ஃபார்ம், பி ஃபார்மில் நான் கையெழுத்து போடத் தயார் என ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார்.. எடப்பாடி இதற்கு தயாராக இருப்பாரா?
பதில் : அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்று ஜூலை 11 பொதுக்குழுவில் முடிவெடுத்தாகிவிட்டது. அந்த முடிவை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டது. அதன்படி ஓபிஎஸ் கட்சி உறுப்பினரே இல்லை. அவர் சின்னத்திற்கான படிவத்தில் கையெழுத்திடுவதை ஈபிஎஸ் எப்படி ஏற்றுக்கொள்வார்? அதற்கு வாய்ப்பே இல்லை.
யாருக்கு அதிக பாதிப்பு?
கேள்வி : இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இருவருக்கும் சுயேட்சை சின்னம் வழங்கப்பட்டால் யாருக்கு பெரிய பாதிப்பு?
பதில் : இரட்டை இலை முடக்கப்பட்டு சுயேட்சை சின்னம் வழங்கப்படுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன். வாக்காளர்கள் சின்னத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில் நின்றபோதே தோற்றிருக்கிறார். சேவல் சின்னத்தில் நின்றபோதும் ஜெயித்திருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உதயசூரியன், இரட்டை ஆகிய சின்னங்கள் களத்தில் இருந்தபோதும் குக்கர் சின்னத்தில் நின்று வென்றார் டிடிவி தினகரன். இரட்டை இலை சின்னம் கிடைத்தால் கூடுதல் நன்மை, அதுவே பெரிய பலனைத் தராது. சின்னம் மாறுவதால் மக்கள் தவறாக மாற்றி வாக்களிக்கப் போவதில்லை.