முப்படை வீரர்களுக்கான கொடி நாள் நிதியை தாராளமாக அள்ளி வழங்குங்கள் - ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்
முப்படை வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்குத் தமிழக மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பினை அளிக்குமாறும் அவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் கொடி நாள் நிதிக்கு கணிசமாகப் பங்களிப்பதற்கு மக்களுக்குப் பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. கொடி நாள் நிதிக்குத் தமிழக மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பினை அளிக்குமாறு ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுக்கொண்டுள்ளார். பெரும் அளவில் நிதி வழங்கி முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக முப்படை வீரர்கள் திகழ்கிறார்கள். முப்படை வீரர்களுடைய குன்றாத விசுவாசமும் கடமையில் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பும் இந்தியாவை வலிமையுள்ள தேசமாக மாற்றியுள்ளது.
வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கையின் சீற்றம் போன்றவற்றினை தீரமுடன் எதிர்கொண்டு வீரர்கள் ஆற்றிய தியாகம் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
அவர்களுடைய இளமைக் காலத்தையும், வாழ்க்கையின் சிறந்த காலத்தையும் நாட்டிற்காகவே அர்ப்பணித்து சேவையாற்றி ராணுவத்திலிருந்து விடைபெறும் போது நம்முடைய நன்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்க வேண்டியது அவசியமாகும். முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் கொடி நாள் நிதிக்கு கணிசமாகப் பங்களிப்பதற்கு மக்களுக்குப் பொன்னான வாய்ப்பு வந்துள்ளது.
டிசம்பர் மாதம் 7ஆம் நாள் முப்படை வீரர்களுக்கான கொடி நாளாகக் கொண்டாடப்பட்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முப்படை வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்குத் தமிழக மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பினை அளிக்குமாறும் அவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். வெல்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.க ஸ்டாலின் அறிக்கை:
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெற்ற தாயையும், பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் இக்கொடி நாளாகும்.
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் நின்று தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது இந்தியத் திருநாட்டின் புகழைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றுவதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அமைத்து தருதலும் நமது கடமையன்றோ!
அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீச கொடி நாளின் கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிப்போம். அந்த நிதி அவர்களின் குடும்பத்தினருக்குப் பல்வேறு வகையிலும் பயன் தரும்.
கடனால் மூழ்கிய குடும்பம்.. ராணிப்பேட்டையில் 3 பேர் தற்கொலை
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் தன்னலம் கருதாத அந்தத் தியாக வீரர்களுக்கான கொடிநாள் நிதிக்குத் தொகை அளிப்பதில் தமிழ்நாடு எப்போதும் தனி இடத்தைப் பெற்று வருகிறது. எனவே, இவ்வாண்டும் பெரும் அளவில் நிதி வழங்கி முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம்.