கழுத்தை நெரிக்கிறது.. கரண்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்குது.. டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்
புதிய தமிழகம் கட்சி திமுகவின் மின்கட்டணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது
சென்னை: மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும், ஆனால் இப்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் கடந்த 10ம் தேதி அமலுக்கு வந்தது.. இதற்கு முன்னதாகவே, மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.
எஸ்.சி, எஸ்.டி விவசாயிகள் மின் இணைப்பு பெற 90% மானியம் - அரசாணை வெளியீடு.. குட் நியூஸ் சொன்ன அரசு!
ஆர்ப்பாட்டம்
இந்தக் கூட்டங்களில், சுமார் 4,500-க்கும் மேற்பட்டோர் கட்டண உயர்வுக்கு எதிராக மனுக்கள் அளித்திருந்த நிலையிலும் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் எதிர்க்கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டதை நடத்திக் காட்டின.. இதன்காரணமாக, மின்கட்டண உயர்வானது, பொதுமக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
கிருஷ்ணசாமி
எனவே, மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்... இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னதாவது:
25% உயர்வு
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம், அனைத்து தரப்பு நிறுவனங்களுக்கும் குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் 35 சதவீதம் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.. இதுதொடர்பாக பெயருக்கு மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினர், அதில் மக்கள் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றுதான் சொன்னார்கள்.. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர்.
ஷாக் அடிக்கும் திமுக
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியைகூட நிறைவேற்றவில்லை.. தமிழகத்தில் மக்கள் இப்போது தான் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.. எனவே மின்கட்டணமும் உயர்ந்துள்ளது... மத்திய அரசுக்கு சேவகம் செய்வதாக அதிமுகவை கேலி கிண்டல் செய்த திமுக அரசு தற்போது மத்திய அரசு சொன்ன காரணத்திற்காக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது... அப்படியென்றால், திமுக மத்திய அரசின் அடிமையா?
மின்கட்டணம்
மின்கட்டணம் ஆவின் பால் விலை என்று அனைத்துமே விலை உயர்ந்துள்ளது... இதற்காக மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்.. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும்.. ஆனால் இப்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, மின்கட்டணம் உயராது என்று வாக்குறுதி தந்தார்களே, அது என்னவாயிற்று? இப்படி கட்டணத்தை உயர்த்துவது, மக்களின் கழுத்தை நெரிப்பதற்கு சமமாகும்..
அடிமை அரசு
எதை செய்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதையில் திமுக அரசு செயல்படக்கூடாது.. முதல்வர் ஸ்டாலினிடம் ஒன்று கேட்கிறேன், எடப்பாடி அரசை அடிமை அரசு என்றீர்களே? மத்திய அரசு எது சொன்னாலும் அதிமுக அரசு செய்கிறது என்றீர்களே? அப்படியானால், நீங்களும் மத்திய அரசு சொல்படி கேட்கிறீர்கள் என்றால், நீங்களும் அடிமையிலும் அடிமை அரசு என்று பெயரா? " என்று கேள்வி எழுப்பி உள்ளார் கிருஷ்ணசாமி.