டிஎன்பிஎஸ்சி மூலம் பணி.. வடமாநிலத்தவர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து.. எச்சரிக்கும் வேல்முருகன்!
சென்னை: வடமாநிலத்தவர்களின் வேட்டை காடாக தமிழ்நாடு மாறி வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். வடமாநிலத்தவர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து உள்ளதாக கூறியுள்ள வேல்முருகன், டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் வடமாநிலத்தவர்களுக்கு பணி கிடைக்கும் வழியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அண்மை காலமாக தமிழ்நாட்டில் அதிகளவில் வடமாநிலத்தவர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். அதேபோல் மத்திய அரசு பணிகளில் அதிகளவிலான வடமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் என்எல்சி நிறுவனத்தால் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட ஜூனியர் பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 200க்கும் அதிகமானோரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
என்எல்சி விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிடுக. வேல்முருகன் முன்வைத்த முக்கிய கோரிக்கை!
வேல்முருகன் பேட்டி
இந்த விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். இந்த நிலையில் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து வேல்முருகன் கூறுகையில், சேது சமுத்திரம் திட்டம். 150 ஆண்டுகாலம் கனவு திட்டம். இந்தியா தமிழகம் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக இருக்கும். சேது சமுத்திரம் திட்டத்தில் மணலை அள்ளும் போது மண் சரிவு ஏற்படும் என்று சொல்கிறார்.
திமுகவின் வெற்றி
மேலும் அங்கு பவள பாறைகளுக்கு பாதிப்பு இல்லாமல் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பல்லாயிரம் கோடி செலவு ஆகும் சேது சமுத்திரம் திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். சேது சமுத்திரம் திட்டம் தொடங்கும் இடத்தில் ராமர் பாலம் இருக்கிறது என்று சொன்ன பாஜக, இப்போது ராமர் பாலம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இது தமிழகத்திற்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
என்எல்சி விவகாரம்
தொடர்ந்து என்எல்சி விவகாரம் குறித்து பேசிய வேல்முருகன், என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். அங்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து விட்டு நிலத்தை கையகப்படுத்த வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வேலை 80 சதவிகிதம் தமிழர்களுக்கு உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். என்எல்சி-யில் வேலையை உறுதி செய்த பின்னரே, நிலத்தை கையகப்படுத்த வர வேண்டும் என்ற கருத்தை சட்டசபையில் வலியுறுத்தி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
வடமாநிலத்தவர்களால் அபாயம்
தொடர்ந்து, வடமாநிலத்தவர்களால் தமிழ்நாட்டில் கொலை நடக்கிறது. தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் வடமாநிலத்தவர்கள் தான் இருக்கிறார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் வடமாநிலத்தவர்களுக்கு பணி கிடைக்கும் வழியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு வடமாநிலத்தவர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது. இந்த அபாயத்தை தடுக்க வேண்டும்.
திராவிட மாடலுக்கு பேராபத்து
தமிழ்நாடு அரசு இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. வட இந்தியர்களால் இன கலவரமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நான் வட மாநில அப்பாவி கூலி தொழிலாளிகளை எதிர்க்கவில்லை வற்புறுத்தி திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களை தான் எதிர்க்கிறேன் என்று தெரிவித்தார்.