காங்கிரசுக்கு அதிக இடம் வேண்டும்.. கேட்ட அழகிரி.. ஒற்றை "கிண்டல் கமெண்ட்டில்" ஆப் செய்த துரைமுருகன்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரளாவில் இருந்து ரமேஷ் சென்னிதாலாவை அனுப்பி வைக்கும் அளவுக்கு நிலைமை ரொம்பவே நெருக்கடியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் காங்கிரஸ் கட்சியினரை பார்த்து அடித்த ஒரு கமெண்ட் பற்றிதான் இப்போது கதர் சட்டைகள் மத்தியில் ஒரே பேச்சாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் இப்போது வரை திமுக-காங்கிரசுக்கான இடப்பகிர்வு இறுதி செய்யப்படவில்லை. காங்கிரசின் அதிக எதிர்பார்ப்பு இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பறந்து வந்த ரமேஷ் சென்னிதாலா
மேயர் மற்று சேர்மன் பதவிகள் உட்பட காங்கிரஸ் கேட்கும் வார்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும், காங்கிரஸ் முன்னிறுத்தும் வார்டுகளையும் திமுக ஏற்க மறுக்கிறது. இதனால் திமுக-காங்கிரசிடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்தது. இதனை டெல்லி தலைமைக்கு தெரிவித்திருந்தார் கே.எஸ். அழகிரி. இதனையடுத்து திமுகவிடம் பேசி முடிவு செய்ய தேர்தல் மேலிட பொறுப்பாளராக கேரளாவை சேர்ந்த மூத்த தலைவர்களின் ஒருவரான ரமேஷ் சென்னிதாலாவை சென்னைக்கு அனுப்பி வைத்தார் சோனியாகாந்தி. அவரும் திமுக தலைமையிடம் பேசி வருகிறார்.

அழகிரி வாதம்
இந்த நிலையில், ''தமிழகத்தில் காங்கிரசுக்கு கிராம புறங்களில் 16 சதவீத வாக்கு வங்கியும், நகர்ப்புறங்களில் 12 சதவீத வாக்கு வங்கியும் நிரந்தரமாக இருக்கிறது. காங்கிரசும் தமிழகத்தில் தனித்த அடையாளமாக வளர்வதற்கு தேர்தல் காலங்களைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது. கட்சி வளர அதிக இடங்களில் நாங்கள் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். அதனால், எங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப கவுரவமான எண்ணிக்கையில் சீட் ஒதுக்குங்கள் என திமுக தலைமையை வலியுறுத்தினார் கே.எஸ். அழகிரி.

கமெண்ட் அடித்த துரைமுருகன்
அப்போது, ''காங்கிரசின் எதிர்பார்ப்பில் தவறில்லை. காங்கிரஸ் வளர வேண்டுமாயின் அதிக இடங்களில் போட்டியிட்டுத்தான் ஆக வேண்டும். அதனால், தனித்து போட்டியிடுங்கள். அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த முடியும். அதிக இடங்களில் போட்டியிட விரும்பித் தான் பாஜக தனித்து போட்டியிட ரெடியாகிறது. அவர்கள் பாணியில் காங்கிரசும் தனித்து போட்டியிடலாமே ? தனித்து போட்டியிட பாஜகவுக்கே தைரியம் இருக்கிறப்போ காங்கிரஸுக்கு இருக்க வேண்டாமா? '' என்று நையாண்டி செய்திருக்கிறார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். அவரின் இந்த கமெண்டைக் கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் அப்-செட்டாகியிருக்கிறார்கள்.

துரைமுருகன் அன்பாக பேசினார்
ஏற்கனவே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்த அழகிரி, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்று திரும்பியபோது, துரைமுருகன் அன்பாக பேசினார் என்று ஒரு வார்த்தையை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தேனீர் வழங்க கூறினார் என்றும் அழகிரி தெரிவித்தார். ஆனால் உள்ளே, இப்படியான.. துரைமுருகனுக்கே உரித்தான நக்கலும் நையாண்டியும் நடந்தேறியது இப்போது கிசுகிசுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications