நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: கருணாநிதி தொடங்கி ஸ்டாலின் அமைச்சரவை வரை அசாத்திய பயணம்
திமுகவின் தீவிர விசுவாசியாக, கட்சி தலைமையின் நம்பிக்கையை பெற்ற பொதுச்செயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை: கலகலப்பான பேச்சுக்கு சொந்தக்காரர் துரைமுருகன். திமுகவின் தொண்டராக பயணத்தை தொடங்கி தீவிர விசுவாசியாக பல ஆண்டுகாலம் பயணித்து பல பதவிகளைப் பெற்று பொதுச்செயலாளர் என்ற உயரிய பதவியை அலங்கரிக்கிறார். கருணாநிதி அமைச்சரவையில் பதவி வகித்த துரைமுருகன் இப்போது மு.க ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
வேலூர் மாவட்டம் காங்குப்பம் ஊரில் பிறந்த துரைமுருகன், வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.
அதே பாசம்.. துளியும் குறையல பாருங்க - ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ்
திமுக வின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார். இவரது நலம்விரும்பியாக இருந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மெட்ராஸில் துரைமுருகனின் உள்ளூர் பொறுப்பாளராக இருந்து 6 வருட படிப்பு செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்.
கலகலப்பான பேச்சாளர்
துரைமுருகன் முதன் முதலில் 1971இல் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 10வது முறையாக காட்பாடி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது நகைச்சுவையான கருத்துகள், சைகைகள், முகபாவனைகளால் அனல்பறக்கும் விவாதங்களில் கூட சட்டசபையை கலகலப்பாக மாற்றிவிடும் வல்லமை உடையவர்.
காட்பாடியில் களமிறங்கி வெற்றி
திமுகவின் தீவிர விசுவாசியாக, கட்சி தலைமையின் நம்பிக்கையை பெற்ற துரைமுருகன், முதன் முதலில் 1971இல் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பு, ராணிப்பேட்டை தொகுதியில் 1977, 1980ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1984ம் ஆண்டு மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டில் காட்பாடியில் மீண்டும் திமுக சார்பில் களம் இறங்கிய துரைமுருகன் வெற்றி பெற்றார்.
10வது முறை வெற்றி
1991ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் துரைமுருகன் தோல்வியடைந்தார். பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதாவது 1996, 2001, 2006, 2011, 2016 என்று தொடர்ந்து 5 முறை துரைமுருகன் வெற்றி பெற்றார். ஏற்கனவே 9 முறை காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன் 10வது முறையாக இந்த தடவை மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 10வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப் பேரவைக்கு செல்கிறார்.
கருணாநிதி அமைச்சரவையில்
திமுகவில் மூத்த தலைவராக அனைவரின் நன்மதிப்பை பெற்ற துரைமுருகன் 1989-91, 1996-2001, 2006,2009 என மூன்று முறை பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2009 முதல் 2011 வரை சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
நீர் வளத்துறை அமைச்சர்
இந்த முறை மீண்டும் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள துரைமுருகன், திமுக அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். இவருக்கு சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மிக முக்கிய துறை ஒதுக்கீடு
நீர்வளத்தின் முக்கியத்துவம் உணர்ந்துதான் மிக முக்கியமான இந்த துறையை கட்சியின் சீனியராக இவருக்கு அளித்திருக்கிறார் மு.க ஸ்டாலின். தமிழகத்தின் நீர் வளத்தை பாதுகாக்கவும், அண்டை மாநிலங்களிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நதிநீரினையும் அனுபவம் வாய்ந்த இந்த அமைச்சர் பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.